Close
மார்ச் 13, 2026 11:00 மணி

நடுக்கடலில் சிக்கித்தவிக்கும் ஏற்றுமதி முட்டைகளை அனுப்பி வைக்க மத்திய அரசு உதவ நாமக்கல் எம்.பி. கோரிக்கை

நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்.

நடுக்கடலில் தத்தளிக்கும் நாமக்கல் முட்டைகளை வெளி நாட்டிற்கு அனுப்பி வைக்க மத்திய அரசு உதவ வேண்டும் என மாதேஸ்வரன் எம்.பி., மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் முட்டைகள் நாமக்கல்லில் இருந்துதான் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கப்பலில் அரபு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள முட்டைகள் நடுக்கடலில் 12 நாட்களாக சிக்கி தவிக்கிறது, நடுக்கடலில் தத்தளித்து வரும் முட்டைகளால் கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். முக்கிய உணவுப் பொருளான முட்டைகளை காலாவதி தேதிக்குள், சம்மந்தப்பட்ட நாட்டிற்கு அனுப்பி வைக்க, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் முட்டைகள் சம்மந்தப்பட்ட நாட்டிற்கு சென்றடையாவிட்டால் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, விரைவாக உரிய நாட்டிற்கு முட்டைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top