Close
மார்ச் 13, 2026 11:19 மணி

திமுக கூட்டணியில் கொமதேக-விற்கு 2 தொகுதிகள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. இன்று அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இக்கூட்டணியில் கொமதேக-விற்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இதேபோல், வைகோ தலைமையிலான மதிமுக-விற்கும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் வைகோ சந்தித்த பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மதிமுக-விற்கு மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் திமுகவின் “உதயசூரியன்” சின்னத்தில் போட்டியிடுவார்கள். எஞ்சிய ஒரு தொகுதியில் மதிமுக-விற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒவ்வொன்றாக உறுதி செய்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top