Close
ஏப்ரல் 23, 2026 8:18 மணி

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம், வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணி துவக்கம்

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி துவங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் வருகிற 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு“சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள எலக்டரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி 6 தொகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பரமத்திவேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 18 வேட்பாளர்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 12 வேட்பாளர்களும், நாமக்கல் தொகுதியில் 27 வேட்பாளர்களும், பரமத்தி வேலூர் தொகுதியில் 31 வேட்பாளர்களும், திருச்செங்கோடு தொகுதியில் 23 வேட்பாளர்களும், குமாரபாளையம் தொகுதியில் 21 வேட்பாளர்களும் என மொத்தம் 132 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் சம்மந்தப்பட்ட சட்டசபை தொகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது, மொத்தம் உள்ள 1,781 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள எலக்ட்ரானி வாக்குப்பதிவு இயந்திரங்களில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும்.

வாக்குப்பதிவிற்கு முதல் நாள் 22ம் தேதி சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும்.

நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, பரமத்திவேலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top