Close
மார்ச் 16, 2026 10:49 மணி

ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி முந்த்ரா துறைமுகத்தை அடைந்த இந்திய கப்பல்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியக் கொடி ஏந்திய ‘சிவாலிக்’ எனும் எல்பிஜி சரக்குக் கப்பல், ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தது.

பாரசீக வளைகுடா பகுதியில் நிலவும் பதற்றமான சூழலில், இந்தியக் கொடி ஏந்திய இரண்டு பெரிய எல்பிஜி கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா இது குறித்துக் கூறுகையில்: சிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரண்டு இந்தியக் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியாவை நோக்கிப் பயணித்து வருகின்றன. சுமார் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவைச் சுமந்து வரும் இக்கப்பல்களில், ‘சிவாலிக்’ முந்த்ரா துறைமுகத்திற்கும், ‘நந்தா தேவி’ காண்ட்லா துறைமுகத்திற்கும் வந்து சேரும்,” என்றார்.

தற்போது பாரசீக வளைகுடா பகுதியில் 22 இந்தியக் கப்பல்கள் மீதமுள்ளதாகவும், அவற்றில் உள்ள 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் இந்த முக்கிய நீர்வழிப் பாதையை மீண்டும் திறக்க, ஈரானுடன் இந்தியா மேற்கொண்ட நேரடிப் பேச்சுவார்த்தை பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து ‘பைனான்சியல் டைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில் ஈரானுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது தீர்வுகளை எட்ட உதவும் என்று இந்தியா கருதுகிறது. அந்த வகையில் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தற்போது முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன. சிவாலிக் மற்றும் நந்தா தேவி கப்பல்களின் வருகை இந்த ராஜதந்திர முயற்சிக்குக் கிடைத்த நடைமுறை வெற்றியாகும் எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும், அனைத்து இந்தியக் கப்பல்களுக்கும் ஒட்டுமொத்த அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றும், தற்போதைக்கு ஒவ்வொரு கப்பலாக ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தியாவிற்கான ஈரானின் உயர்மட்டப் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, மேற்கு ஆசிய மோதல்களுக்கு மத்தியிலும் இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க அனுமதிக்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசு ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top