திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பர்வதமலையின் உட்கட்டமைப்பு மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பர்வதமலைக்கு செல்ல தினசரி காலை 05 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை மலை ஏற அனுமதிக்கப்படுகிறது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், நுரையிரல் பாதிப்பு உள்ளவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள், உயர்/ குறை இரத்த அழுத்தம் கொண்டவர்கள் மலை எற முயற்சிக்க வேண்டாம் எனவும், தற்போழுது நாள் ஒன்றுக்கு 1000 நபர்கள் பர்வத மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பௌர்ணமி மற்றும் முக்கிய தினங்களில் கூடுதலாக பக்தர்களை அனுமதிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
வெளி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அனுமதி பெற்று மலை ஏறுவதற்கு இணைய வழி செயலியில் விண்ணப்பித்து அனுமதி பெற உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும் மலை அடிவாரத்தில் சுழற்சி முறையில் நிலையான மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், முக்கிய தினங்களில் அரசு துறைகள் சார்பில் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், கழிவறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், மலை அடிவாரம் மற்றும் மலை ஏறும் வழிகளில் வனத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகள் இணைந்து சுழற்சி முறையில் பணியாளர்களை நியமனம் செ ய்ய வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கு.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா, இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




