மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு, கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் 2027ஆம் ஆண்டிற்கான, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, வீடு வாரியாக ஆக.1 முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும், தங்கள் வழக்கமான அலுவல் மற்றும் கற்பித்தல் பணிகளுடன் இணைந்து கூடுதல் பொறுப்பாக ஏற்று பணியாற்றுகின்றனர்.
இந்த பணி வழக்கமான அலுவல் நேரத்திற்கு பின்னர் கூடுதல் நேரம், அதிக உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு தேசியப் பொறுப்பாகும். நமது அண்டை மாநிலமான கேரள அரசு, இப்பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்களின் கூடுதல் உழைப்பை மதித்து, அவர்களுக்கு 20 அரை நாள் சிறப்பு விடுப்பு அல்லது 10 முழு நாள் சிறப்பு விடுப்பு வழங்கியுள்ளது.
அதேபோன்று, நமது தமிழ்நாட்டிலும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், 20 அரை நாள் சிறப்பு விடுப்பு அல்லது 10 முழு நாள் சிறப்பு விடுப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூடுதல் உழைப்பிற்கு உரிய அங்கீகாரமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




