Close
மார்ச் 20, 2026 11:28 மணி

பெண்களுக்கு இலவச கைத்துப்பாக்கி: நாமக்கல் வேட்பாளரின் அதிரடி வாக்குறுதி!

அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி தலைவர் ரமேஷ்.

தேர்தல் களம் என்றாலே வாக்குறுதிகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், நாமக்கல்லில் ஒரு வேட்பாளர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

“பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமா? அப்படியானால் ஒவ்வொரு பெண்ணுக்கும் கையில் ஒரு துப்பாக்கி இருக்க வேண்டும்” என அதிரடி கிளப்பியுள்ளார் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் தலைவர் காந்தியவாதி ரமேஷ்.

நாமக்கல்லைச் சேர்ந்த இவர் சாதாரணமானவர் அல்ல. பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை எதையும் விட்டுவைக்காத ‘தேர்தல் நாயகன்’. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியையே எதிர்த்துப் போட்டியிட்டவர். தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் களம் காண்கிறார்.

நாமக்கல் குளக்கரை அருகில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ரமேஷ், அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் :

  • மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்துப் பெண்களுக்கும் உரிமத்துடன் கூடிய இலவசக் கைத்துப்பாக்கி வழங்கப்படும். அத்துடன் இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் உண்டு.
  • பெண் குழந்தைகளை ஒருமுறை வெளிநாட்டிற்கு விமானத்தில் இலவசமாக அழைத்துச் செல்லப்படும்.
  • பெற்றோருடன் வசிக்கும் குடும்பங்களுக்கு ஒரு இலவச எலக்ட்ரிக் கார் வழங்கப்படும்.
  • தொகுதி மக்களின் அடையாள அட்டையின் பேரில் வங்கியில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும்.

ஊழலுக்குக் காத்திருக்கும் ‘கழுதை’ தண்டனை!

அரசியலில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க இவர் முன்மொழிந்துள்ள தண்டனை தான் ஹைலைட். யாராவது லஞ்சம் வாங்கினாலோ அல்லது ஊழல் செய்தாலோ, அது தேசவிரோதச் செயலாகக் கருதப்படும். அவர்களுக்குத் தண்டனையாக “மொட்டை அடித்து, கழுதை மீது அமரவைத்து” ஊர்வலமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அரசின் மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் அனைத்தும் மக்களின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், கிராமங்களில் உள்ள கனிம வளங்கள் அந்தந்த கிராமத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், 234 எம்.எல்.ஏ-க்கள் அமரக்கூடிய வகையிலான ஒரு மாதிரி சட்டமன்றத்தை நாமக்கல்லிலேயே அமைக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காந்தியவாதி என்று பெயர் வைத்துக்கொண்டு, கையில் துப்பாக்கி கொடுப்பதாக ரமேஷ் அறிவித்திருப்பது முரண்பாடாகத் தெரிந்தாலும், அவரது தேர்தல் அறிக்கை நாமக்கல் மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top