Close
மார்ச் 20, 2026 11:33 மணி

விவசாயிகளின் கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு: விமுக பொதுக்குழுவில் தீர்மானம்

நாமக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில், அதன் தலைவர் செல்ல ராஜாமணி பேசினார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கோரிக்கைகளுக்கான தீர்வை தேர்தல் அறிக்கையில் அறிவித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என விவசாய முன்னேற்றக்கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாய முன்னேற்றக்கழக (விமுக), பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. விமுக பொதுச்செயலாளர் பாலசுப்பரமணியன், பிஏசிஎல் பண மீட்பு போராட்டக்குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முனின்னிலை வகித்தனர். விமுக தலைவர் செல்ல ராஜாமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.

கூட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் விவசாயிகளின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே, சட்டத்திற்கு புறும்பாக, விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் ஒரு ஆண்டிற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும், அரசு அவர்களை அழைத்துப் பேசவில்லை.

பிஏசிஎல் நிதி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 1 கோடி முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரவேண்டிய சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டுப்பணத்தை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பல போராட்டம் நடத்தியும் தமிழக அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை.

இனி மேல் திமுக அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் என்று நம்பமுடியவில்லை. அதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டுப்போடுவதில்லை என முடிவு செய்துள்ளோம்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மனது வைத்தால் மத்திய அரசுடன் பேசி பிஏசிஎல் முதலீட்டாளர்களுக்கு, முதலீட்டு பணத்தை திரும்பப் பெற்றுத்தர முடியும். எனவே விமுக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சை நேரில் சந்தித்து எங்களின் கோரிக்கைகளை அளிக்க உள்ளோம்.

அதை அவர் ஏற்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அதற்கான தீர்வை அறிவித்தால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், விவசாயிகளும், சுமார் 1 கோடி பேர் கொண்ட பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் குடும்பத்தினரும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்.

ஓரு தொகுதிக்கு சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் எங்களிடம் உள்ளன. அதிமுகவும் எங்கள் கோரிக்கையை ஏற்று அறிவிக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை புறக்கனிப்போம் அல்லது நோட்டாவிற்கு ஓட்டளிப்போம். அதை விரைவில் உயர்மட்டக்குழுவை கூட்டி அறிவிப்போம் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top