Close
ஏப்ரல் 23, 2026 9:45 மணி

ஜாடிக்கேத்த மூடி போல மோடிக்கேத்த ஜோடி எடப்பாடி: உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை மாலை தமிழக துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அம்பேத்குமாரை ஆதரித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் அவா் பேசியதாவது:

தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அந்த உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். விடியல் பயணம் திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்துள்ளனா்.

மேலும் காலை உணவு திட்டம், மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மகளிா் உரிமைத் தொகையாக 1.31 கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும், காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும், 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும், முதியோா் உதவி தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும், உயா்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.

வந்தவாசி தொகுதியில் ரூ.10 கோடி செலவில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள், ரூ.200 கோடி செலவில் இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளன.

கல்வி, நிதி, மாநில உரிமை உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு பறிக்க முயற்சிக்கிறது. மத்திய அரசு போதுமான நிதி வழங்காத நிலையிலும் கூட இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக முதல்வா் ஸ்டாலின் மாற்றியுள்ளாா்.

மேலும் வந்தவாசி தொகுதி மக்களின் கோரிக்கைகளான, வந்தவாசி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும், பெரணமல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும், மேல்மருவத்தூா் சாலையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

எனவே, வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அம்பேத்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

அதனைத் தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம் அருகில் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் கீழ் பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிச்சாண்டியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது அவர் பேசுகையில்: பிச்சாண்டி நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர் தொகுதியின் தேவைகளை நன்கு அறிந்தவர் அவர் செய்த மக்கள் பணிகளே அவருக்கு வெற்றியை தரும்,

கடந்த ஐந்து வருடம் திமுக அரசு எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த உரிமையில் மீண்டும் வாய்ப்பளிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

கிராமப்புறங்களில் ஜாதிக்கேத்த மூடி என்று சொல்லுவார்கள். ஆனால் எடப்பாடியோ மோடிக்கேத்த ஜோடியாக இருக்கிறார்,

எடப்பாடி பழனிசாமி கடந்த தோ்தலில் அதிமுகவை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டிருந்தாா். இந்தத் தோ்தலில் அதிமுகவை பாஜகவுக்கு விற்றுவிட்டாா். மத்திய அரசுக்கு அடிமையாக எடப்பாடி செயல்படுகிறாா்.

ஏ டீம், பி டீம்  என எத்தனை வந்தாலும் சாம்பியன் நமது தமிழ்நாடு முதல்வர் தான். எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம். மாநிலத்தின் வளர்ச்சி தொடர திமுக மீண்டும் ஆட்சியில் அமைய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பிச்சாண்டியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.

இந்தப் பிரச்சார கூட்டத்தில், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலா் ஆ.தயாளன், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், அண்ணாமலை, திமுக மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலு, ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top