தமிழக சட்டசபை தொகுதிகளின் வரிசையில் 94-வது தொகுதியாக உள்ள நாமக்கல், 2026 தேர்தலில் ஒரு விறுவிறுப்பான அரசியல் களத்தைக் கண்டுள்ளது. முட்டை உற்பத்தி, லாரி பாடி கட்டமைப்பு எனத் தொழில் நகரமாக விளங்கும் நாமக்கல்லில் இந்த முறை மும்முனைப் போட்டியையும் தாண்டி நான்கு முனைப் போட்டி அனல் பறக்கிறது.
மண்ணின் மைந்தர்கள் மோதல்
ராணி (திமுக): நாமக்கல் தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏ. என்ற இலக்கோடு களம் காண்கிறார். திமுக மகளிர் தொண்டரணிச் செயலாளரான இவர், ஏற்கனவே ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவி வகித்தவர் என்பதால் மக்களிடம் நன்கு அறிமுகமானவர். அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி இவர் வாக்கு சேகரிக்கிறார்.
பி.எஸ். மோகன் (அதிமுக): அதிமுகவின் வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர். தொழிலதிபரான இவர், அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை முன்வைத்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். உட்கட்சிப் பூசல்கள் ஒரு சவாலாக இருந்தாலும், கட்சியின் வலுவான வாக்கு வங்கியை அவர் நம்பியுள்ளார்.
சி.எஸ். திலீப் (தவெக): தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களம் காணும் இவர், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கரின் சகோதரி மகன் ஆவார். அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால், புதுமையான தேர்தல் வியூகங்களுடன் அதிமுக மற்றும் திமுகவிற்கு இணையான போட்டியை உருவாக்கி வருகிறார்.
பிரவீன்குமார் (நாம் தமிழர் கட்சி): கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் கிடைத்த ஆதரவை வாக்குகளாக மாற்றும் முயற்சியில் இவர் ஈடுபட்டுள்ளார்.
தொகுதி மக்கள் நீண்டகாலமாகச் சில முக்கியத் தீர்வுகளுக்காகக் காத்திருக்கின்றனர்:
சேலம் சாலை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கை.
கோழிப்பண்ணைத் தொழிலைப் பாதுகாக்க நாமக்கல்லைத் தனி மண்டலமாக அறிவிக்க வேண்டும் மற்றும் முட்டைகளைப் பாதுகாக்கக் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். லாரி பாடி கட்டமைப்புப் பட்டறைகளை நகருக்கு வெளியே ஒரு தனி வளாகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் போன்ற கோரிக்கைகளும் உள்ளன
வாக்காளர் விவரம்
நாமக்கல் தொகுதியில் மொத்தம் 2,35,351 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை (1,22,093) ஆண்களை விட (1,13,217) அதிகமாக உள்ளது. எனவே, பெண் வாக்காளர்களின் ஆதரவு யாருக்குக் கிடைக்கிறதோ, அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
திமுகவின் முதல் பெண் வேட்பாளர் வெற்றி பெறுவாரா? அல்லது அதிமுக தனது கோட்டையைத் தக்கவைக்குமா? தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கும்? இந்த கேள்விகளுக்கு விடை நாமக்கல் மக்களின் கைகளிலேயே உள்ளது.




