Close
ஏப்ரல் 24, 2026 3:56 காலை

திமுக குடும்ப அரசியலை நடத்தி வருகிறது: ஜெ. பி. நட்டா

தமிழகத்தில் தற்போது திமுக குடும்ப அரசியலை நடத்தி வருகிறது.  திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ. பி.நட்டா, தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நட்டா பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து பாதுகாப்பான ஊழல் அற்ற மாநிலமாக மாற்றப்படும். தமிழகத்தில் தற்போது திமுக வாரிசு அரசியல்,  பண அரசியல், குடும்ப அரசியலை நடத்தி வருகிறது. பழமையான கலாச்சாரம் ஜனநாயகம் கொண்ட தமிழ்நாடு இப்போது ஒரு குடும்பத்தால் ஆளப்படுகிறது. இவர்களை வெளியேற்ற வேண்டும் என்பது நாம் உறுதியாக இருக்கிறோம்.

தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வந்துள்ளன. திமுகவினர் இந்து மதத்தினருக்கு எதிராக பல கருத்துக்களை சொல்வது மட்டுமல்லாமல் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற தடை விதித்தார்கள், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்தார்கள்.

கடந்த தேர்தலில் திமுக தெரிவித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் மின்சார கட்டணம் வசூலிப்போம், அரசு பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறிய திமுகவினர் தற்போது அதனை நிறைவேற்றவில்லை.

பிரதமர் மோடி இந்தியாவை பொருளாதார வளர்ச்சியில் உயர்த்தியுள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு நீதி அளிக்கவில்லை என திமுக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு தமிழக திட்டங்களுக்காக சுமார் ரூபாய் 14 லட்சம் கோடிக்கு மேல் நிதி வழங்கியுள்ளது. ரயில்வே துறை தமிழகத்தில் மிக சிறப்பான கட்டமைப்பை அமைத்திருக்கிறது. திருவண்ணாமலை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு திட்டங்களை மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு அளித்துள்ளன என அமைச்சர் பேசினார்.

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை! பாஜக வேட்பாளா் ஏழுமலை!

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ஏழுமலை பேசியதாவது;

ஆன்மிக நகரமான திருவண்ணாமலை மையப்பகுதியில் இருக்கும் ஈசான்ய குப்பை மேட்டை அகற்றுவதே முதல் வேலை. குப்பை கொட்டும் இடத்தை மாநகரத்திற்கு வெளியே மாற்றி அமைப்பேன். நகரை தூய்மையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் தருவேன் என்ற திமுகவின் வாக்குறுதி ஏமாற்று வேலை. ஆனால், நாங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் தருவோம். அந்தத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் செலுத்துவோம் என அதிமுக பொதுச்செயலா் கூறியிருக்கிறாா். அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். வீடுகளுக்குத் தேவையான பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களையும், மானியத்துடன் ஸ்கூட்டியும் மகளிருக்கு வழங்கப்படும்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும், 30 நாள்களில் திருவண்ணாமலை மாநகரில் உள்ளூா் மற்றும் கிரிவல பக்தா்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ், அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ராஜன், பாமக மாவட்டச் செயலா் ஏந்தல் பக்தவச்சலம், தமாகா மாவட்டத் தலைவா் ராயா் கிருஷ்ணமூா்த்தி, பாஜக பொறுப்பாளர்கள் காயத்ரி, வழக்கறிஞர் சங்கர், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கிஷோர் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும்  பாஜக, அதிமுக நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள்  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top