Close
ஏப்ரல் 23, 2026 8:17 மணி

அண்ணாமலையார் கோயில் , ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் பஞ்சாங்க படனம் நிகழ்வு!

புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்த சிவாச்சாரியார்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராபவ  தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர்.

சித்திரை மாதம் 1-ம் நாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டையட்டி மூலவருக்கும், சம்பந்த விநாயகருக்கும் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் சந்திரசேகரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தங்கத் தேரினை பக்தா்கள் இழுத்து வழிபட்டனா்.

பஞ்சாங்கம் வாசிப்பு

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு ஒரு முக்கிய நிகழ்வாகும். அதன்படி காலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர். கோவில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்தை வாசித்து இந்த ஆண்டுக்கான அண்ணாமலையார் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, வருடம் முழுவதும் நல்லாட்சியை வேண்டி, அண்ணாமலையார் வழிபட்டனர்.

மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு அதிகாலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளுக்கும், மனசா தேவி, குரு தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், செழுஞ்சுடர் விநாயகர்,ராகு கேது சன்னதிகள், உமா தேவியார்  மற்றும் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரம வளாகத்தில் அடக்கம் ஆகியுள்ள 27 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.

தொடர்ந்து கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம், இனிப்புகள், பழங்கள் வழங்கப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகானை வழிபட்டனர்.

ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில்

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாளன்று மகாசமாதி எய்தி, அகண்ட சொரூபத்தில் இரண்டறக் கலந்தருளினார். ஸ்ரீ பகவானின் இந்த மகாசமாதி நன்னாளானது, தமிழ் புத்தாண்டுத் திருநாளோடு ஒன்றிணைந்து வருவது ஒரு சிறப்பம்சமாகும். இப்புத்தாண்டை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ பகவானது திருச்சந்நிதியில் விசேஷ பூஜைகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, பிறக்கின்ற ‘பராபவ’ வருடத்திற்கான புதிய பஞ்சாங்கம் மாலை சுமார் 3:30 மணியளவில் ஸ்ரீ பகவானின் சந்நிதியில் வாசிக்கப்பட்டது (பஞ்சாங்க படனம்). இதில் அன்பர்களும் பக்தப் பெருமக்களும் திரளாகக் கலந்துகொண்டு பஞ்சாங்க வாசிப்பைக் கேட்டுப் பயன்பெற்றனர்.

மேலும், 1950-ம் ஆண்டு இதே நன்னாளில்தான் ஸ்ரீ பகவான் மகாசமாதி அடைந்தார் என்பதை பக்தியோடு நினைவுகூரும் வண்ணமாக, ரவு 8 மணியளவில் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் மகாநிர்வாண அறைக்கு முன்பாகப் பக்தர்கள் பெருந்திரளாகக் கூடி, மிகவும் பக்தியுடன் ‘அக்ஷரமணமாலை’யைப் பாராயணம் செய்து வழிபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top