நாமக்கல் வடக்கு, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழைய 11ம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவ மாணவிகள், 50ம் ஆண்டுகள் கழிந்து, பொன்விழா ஆண்டில் சந்தித்து, தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், 1975-76ல், 200 மாணவ, மாணவியர் பழைய 11ம் வகுப்பு எஸ்எஸ்எல்சி படித்தனர். அவர்கள் பள்ளி படிப்பை முடித்து, கல்லூரியில் பியுசி படித்து, பின்னர் பட்டப்படிப்பை முடித்து, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆசிரியர்கள் போன்று பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். பல தொழிலதிபர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், 50ம் ஆண்டு பொன்விழா ஆண்டில், முன்னாள் மாணவ, மாணவியர் சந்திக்க முடிவு செய்தனர். அதையடுத்து, வாட்ஸ்ஆப் குழு அமைத்து, அவர்களை ஒருங்கிணைத்தனர். அதையடுத்து, இன்று நாமக்கல்லில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் அனைவரும், தங்களின் பசுமையான நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் தங்கள் குடும்பம், குழந்தைகள், அவர்களின் படிப்பு உள்ளிட்டவை குறித்தும், பள்ளியில் படிக்கும் போது நடந்த சுவையான அனுபவங்கள் குறித்தும், மலரும் நினைவுகளாக பரிமாறிக்கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள், சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில், பிரிய மனமின்றி மீண்டும் சந்திப்போம் என்ற உறுதியுடன் விடை பெற்றனர்.




