மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரியும், ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்படுபவருமான அஜய் பால் சர்மா, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவருக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான், வாக்காளர்களை மிரட்டுவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, தேர்தல் காவல்துறை பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் பால் சர்மா, அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
ஜஹாங்கீர் கானின் வீட்டிற்குச் சென்ற அவர், அங்கு வேட்பாளர் இல்லாத நிலையில் அவரது உறவினர்களிடம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். ஜஹாங்கீர் கானின் உறவினர்களிடம் பேசிய அஜய் பால் சர்மா, “வாக்காளர்களை மிரட்டுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதை அவரிடம் (ஜஹாங்கீர் கானிடம்) சொல்லுங்கள். யாராவது அத்துமீறலில் ஈடுபட்டாலோ அல்லது வாக்காளர்களைத் துன்புறுத்தினாலோ நாங்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்போம். அதன் பிறகு புகார் கூறக் கூடாது” என்று எச்சரித்தார்.
இந்த ஆய்வின்போது மற்றுமொரு முக்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஜஹாங்கீர் கானுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, 10 காவலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், அவரது வீட்டில் 14 மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் பணியில் இருப்பதைக் கண்ட சர்மா அதிர்ச்சியடைந்தார். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பது குறித்து விளக்கம் கேட்டு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, இந்த அதிகாரியின் செயலைப் பாராட்டி “மிரட்டல் காலம் முடிந்துவிட்டது என்பதை இந்தச் செய்தி உணர்த்துகிறது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அஜய் பால் சர்மாவின் கடந்தகால என்கவுண்டர் பின்னணியைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது. தேர்தல் ஆணையம் இவரை உள்நோக்கத்துடன் அனுப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. “வங்காளம் ஒன்றும் உத்தரப் பிரதேசம் அல்ல” என்று அக்கட்சி சாடியுள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக தனது முகவர்களை தேர்தல் பார்வையாளர் என்ற பெயரில் அனுப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் களம் ஏற்கனவே பதற்றமாக உள்ள நிலையில், இந்தச் சம்பவம் ஆளும் கட்சிக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரித்துள்ளது.


