Close
மே 20, 2026 9:22 மணி

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சாதனைகள்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஆ. மணிகண்டன்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், தமிழ்நாட்டின் கல்வித் தரமும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத்தலைவர் ஆ.மணிகண்டன் தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.31% ஆக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 8,70,643 மாணவச் செல்வங்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். இதில் 8,21,105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் பிரிவில் 4,35,247 பேர் தேர்வு எழுத, 4,19,891 பேர் தேர்ச்சி பெற்று 96.47% என்ற மிக உயர்வான விகிதத்தை எட்டியுள்ளனர்.

மாணவர் பிரிவில் 4,35,396 பேர் தேர்வு எழுத, 4,01,214 பேர் தேர்ச்சி பெற்று 92.15% விகிதத்தை பதிவு செய்துள்ளனர்.

நடப்பாண்டிலும் மாணவர்களை விட மாணவியர் 4.32% அதிக தேர்ச்சி பெற்று தங்களின் கல்விச் சாதனையைத் தொடர்ந்துள்ளனர்.

குறிப்பாக, தமிழக அரசின் தீவிரக் கண்காணிப்பிலும் வழிகாட்டுதலிலும் இயங்கும் அரசுப் பள்ளிகள் 91.86% தேர்ச்சி பெற்றுள்ளதும், 1,931 அரசுப் பள்ளிகள் 100% முழுமையான தேர்ச்சியைப் பெற்றுள்ளதும் இச்சாதனையின் மிகப் பெரும் பெருமிதமாகும்.

இந்த உன்னதமான வெற்றி, கல்விப் புரட்சியை ஏற்படுத்தி வரும் மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குக் கல்வித் திட்டங்களுக்கும், முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அர்ப்பணிப்புமிக்கச் செயல்பாடுகளுக்கும் கிடைத்த பெரும் பரிசாகும்.

அந்தத் திட்டங்களை தற்போதும் தொடர்வதாக அறிவித்திருக்கும் தற்போதைய முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பறைகளில் அர்ப்பணிப்புடன் கற்பித்த ஆசிரியர் பெருமக்களின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் மட்டுமே இந்த இமாலய வெற்றி சாத்தியமானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தமிழக அரசின் சிறந்த கல்வித் திட்டங்களும், பள்ளிக்கல்வித் துறையின் முறையான திட்டமிடலும், ஆசிரியர்களின் போற்றுதலுக்குரிய அர்ப்பணிப்பும் இணைந்துதான் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த வரலாற்று வெற்றியை சாத்தியமாக்கியுள்ளன. அரசுப் பள்ளிகளின் இத்தொடர் முன்னேற்றம் தமிழகக் கல்வித்துறையின் பொற்காலத்தை உலகிற்கு காட்டுகிறது.

உளப்பூர்வமான உழைப்பை வழங்கிய ஆசிரியர் பெருமக்கள் மற்றும் கடின உழைப்பால் சாதித்துக் காட்டிய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எமது சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top