மாவட்டம் தோறும் பட்ஜெட்டிற்கு முன்பு வேளாண்துறை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், தமிழக வேளாண்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபையில் விரைவில், 2026-27ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, வேளாண்மை பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கான வேளாண்மைத்துறை சம்மந்தமான கருத்துக்கேட்புக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் தலைமை வகித்து வேளாண்மைத்துறை சம்மந்தமான கோரிக்கைகளை கேட்டறிந்தார். நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.
அப்போது, 10 மாவட்டங்களை உள்ளடக்கி கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதால், விவசாயிகள் முழுமையாக பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இனி வரும் ஆண்டுகளில் மாவட்டம் தோறும் பட்ஜெட்டிற்கு முன்பு வேளாண் துறை சம்மந்தமான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




