சென்னை நகரின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்குப் பயணம் செய்யும் சுமார் 70 லட்சம் பயணிகள் பயனடையும் வகையில், ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து செல்லலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மனதார வரவேற்றுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று மாநிலப் போக்குவரத்து ஆணையம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும், பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நகருக்குள் நுழையக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த உத்தரவால் சென்னை நகரின் மையப்பகுதி மற்றும் வடசென்னை பகுதி மக்கள் கிளாம்பாக்கம் வரை செல்ல கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஆணை பெற்று, பயணிகளின் நலன் கருதி சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து இயக்கி வந்தது.
உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு மட்டும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், மாநிலப் போக்குவரத்து ஆணையம் பிறப்பித்திருந்த அந்தத் தடை உத்தரவை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
லட்சக்கணக்கான பயணிகள் நிம்மதி: இத்தீர்ப்பின் மூலம், தினசரி தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்குப் பயணம் செய்யும் லட்சக்கணக்கான தொலைதூரப் பயணிகள் தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே பேருந்துகளைப் பிடிக்க முடியும் என்பதால் பெரிதும் பயனடைவார்கள். இந்தத் தீர்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நகரங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவையில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேலான தேவையை ஆம்னி பேருந்துகள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. தற்போது தமிழகம் முழுவதும் தினசரி சுமார் 5,800 ஆம்னி பேருந்துகள், 7,700-க்கும் மேற்பட்ட சேவைகளை இயக்கி, நாளொன்றுக்கு 3 முதல் 4 லட்சம் பயணிகளைக் கையாண்டு வருகின்றன. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பொதுமக்களின் பயண வசதியையும், தனியார் பொதுப் போக்குவரத்து துறையின் நலன்களையும் பாதுகாக்கும் மிக முக்கியமான தீர்ப்பாக அமைந்துள்ளது.
வழக்கின் உண்மைகள் மற்றும் சட்ட நிலைகளை விரிவாக ஆராய்ந்து இந்த நியாயமான தீர்ப்பை வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், நீதிமன்றத்தில் திறம்பட வாதாடி பயணிகளின் நலனைக் காப்பாற்றிய வழக்கறிஞர்களுக்கும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்
இந்தத் தீர்ப்பின் மூலம் சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகள் தடையின்றி வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதால், இனிவரும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் தென்மாவட்ட பயணிகள் எவ்வித அலைச்சலும் இன்றி நிம்மதியாகப் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

