திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செயல்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்திருப்பதாவது:
அண்ணாமலையார் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் 2026-2027ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதில், இளம் அர்ச்சகர் சான்றிதழ் ஓராண்டு பயிற்சியும், ஓதுவார் பயிற்சி மூன்றாண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்து மதத்தை பின்பற்றுகிற, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சி பள்ளியில் சேரலாம்.
அர்ச்சகர் பயிற்சி மற்றும் ஓதுவார் பயிற்சியில் சேர 14 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு ரூ 10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். பகுதி நேர மாணவர்களுக்கு ஊக்குத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி அனைத்தும் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த திருக்கோயில்களின் அலுவலகத்தில் அலுவலக வேலை நேரத்தில் நேரிலோ அல்லது அந்தந்த திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இப்பயிற்சிப் பள்ளிகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.




