Close
ஜூன் 12, 2026 12:18 காலை

வரும் 15ம் தேதி முதல் 25 சதவீதம் லாரி வாடகை உயர்வு: மாநில லாரி சம்மேளனம் அறிவிப்பு

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ்

டீசல் விலை உயர்வால் வரும் 15ம் தேதி முதல், 25 சதவீதம் லாரி வாடகை உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என மாநில லாரி சம்மேளனம் அறிவித்துள்ளது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன, செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சம்மேளன தலைவர் தனராஜ் தலைமை வகித்தார். கூட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமீபத்தில் டீசல் விலை, லிட்டருக்கு ரூ. 8 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஒரே தவணையாக டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி விட்டால், நாங்கள் அதற்கேற்ப லாரி வாடகை உயர்த்திக்கொள்ள முடியும்.

அடிக்கடி டீசல் விலையை உயர்த்துவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தற்போதுள்ள வாடகையில் இருந்து, 25 சதவீதம் உயர்த்தி, வரும் 15ம் தேதி முதல், வாடகை உயர்வை நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு மன்னிப்பை கோருகிறோம். பொதுமக்கள், இந்த வாடகை உயர்வை ஏற்றுக்கொண்டு லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

லாரிகளில் அதிக பாரம் ஏற்றும் பிரச்னையை தீர்க்கும் வகையில், தமிழக அரசு, அதிக பாரம் ஏற்றும் வாகனங்களை தடுக்க வேண்டும். நேஷனல் பர்மிட் பெற்ற வாகனங்களுக்கு குறிப்பிட்ட கம்பெனிகளின் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.

இந்த கருவிகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள், சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, பிற மாநிலங்களில் குறைவான விலையில் வழங்கும் நிலையில், தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

அதனால், தமிழக போக்குவரத்துறை அமைச்சர், இதில் தலையிட்டு, ஜிபிஎஸ் கருவியை குறைந்த விலையில் கிடைக்க செய்ய வேண்டும். அதை பொருத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.

தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக லாரிகள், நேஷனல் பர்மிட் வரி தொகையை, இங்கிருந்து ஆன்லைன் மூலம் செலுத்தி வாகனங்கள் தமிழகம் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

ஆனால், மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைஅமைச்சகம், லாரி உரிமையாளர்கள், லாரிகளுக்கான நேஷனல் பர்மிட் வரியை செலுத்துவதற்கான வெப்சைட் அனுமதியை நிறுத்தி வைத்துள்ளதால், நேஷனல் பர்மிட் வரியை செலுத்த முடியவில்லை. இதனால், வட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தமிழக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அதற்கான அனுமதியை மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைந்து வழங்க வேண்டும்.

10,000 லாரிகள், நேஷனல் பர்மிட் வரி செலுத்தப்பட்டதால் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும், 20,000க்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top