திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது விளையாட்டு விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு புரதச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்பட வேண்டும், விளையாட்டு விடுதிகள் அனைத்து நாட்களிலும் முழுமையாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தில் பழைய உபகரணங்களை அகற்றி புதிய உபகரணங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
திருவண்ணாமலையில் சுமார் ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை வரும் 23-ஆம் தேதி திறக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், ஹாக்கி மைதானத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வீரர்கள் பயிற்சி மற்றும் விளையாட்டில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தின் தண்ணீரை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திருவண்ணாமலை மாவட்டத்தை வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கோயம்புத்தூருக்கு இணையான வளர்ச்சி பெற்ற நகரமாக திருவண்ணாமலையை மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை விளையாட்டு விடுதியில் ஆய்வு செய்த அமைச்சர், மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் வசதிகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.
பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.




