Close
ஜூன் 13, 2026 10:48 காலை

48 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கிய பில்லா- ரங்கா வழக்கு

இன்றைய தலைமுறைக்கு பில்லா, ரங்கா என்றால் ரஜினி நடித்த இரண்டு படங்கள் என்று தான் தெரியும். ஜென்-ஸி தலைமுறைக்கு அஜித் நடித்த பில்லா தான் நினைவுக்கு வரும்.

ஆனால் 1978-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘பில்லா- ரங்கா’ கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையுமே அதிரவைத்தது என்பது தெரியாது.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும், அந்தச் சம்பவம் இன்றும் பொதுமக்களின் மனதில் நீங்கா வடுவாக இருப்பதற்குக் காரணம், குற்றவாளிகளின் கொடூரமும், அது பொதுவெளியில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த இந்தியர்களின் பார்வையை முற்றிலும் மாற்றியமைத்ததும்தான்.

48 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தப் பயங்கர சம்பவம் குறித்த முழு விவரம் இதோ:

அந்த ஒரு மாலைப் பொழுது. டெல்லியின் தௌலா குவான் பகுதியில் வசித்து வந்த இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் மதன் மோகன் சோப்ராவின் பிள்ளைகள் தான் கீதா சோப்ரா (16) மற்றும் சஞ்சய் சோப்ரா (13). கீதா கல்லூரி இரண்டாம் ஆண்டும், சஞ்சய் பள்ளியிலும் படித்து வந்தனர்.

1978, ஆகஸ்ட் 26 அன்று மாலை, அகில இந்திய வானொலியின் பிரபலமான ‘யுவ வாணி’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கீதாவும், அவருக்குத் துணையாகத் தம்பி சஞ்சய்யும் வீட்டிலிருந்து புறப்பட்டனர்.

அன்று டெல்லியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வானொலி நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த சிறுவர்களுக்கு, டாக்டர் எம்.எஸ். நந்தா என்பவர் தனது காரில் ‘லிப்ட்’ கொடுத்து, அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக இறக்கிவிட்டார். ஆனால், அவர்கள் இருவரும் வானொலி நிலையத்தை அடையவே இல்லை.

இரவு 8 மணிக்குத் தங்கள் மகளின் குரலைக் கேட்க வானொலியைத் திருப்பிய சோப்ரா குடும்பத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு வேறு ஒருவரின் குரல் ஒலித்தது. பதற்றமடைந்த தந்தை உடனடியாக வானொலி நிலையத்திற்குச் சென்றபோது, பிள்ளைகள் இருவரும் அங்கு வரவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

பிள்ளைகளைக் காணாமல் இரண்டு நாட்கள் சோப்ரா குடும்பத்தினர் தவித்த நிலையில், ஆகஸ்ட் 28 அன்று டெல்லியின் காட்டுப் பகுதியில் மாடு மேய்ப்பவர் ஒருவர் இரண்டு உடல்கள் கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

அடையாளம் காணச் சென்ற பெற்றோருக்கு அது கீதா மற்றும் சஞ்சய்யின் உடல்கள் தான் என்பது உறுதியானது. தலைநகரிலேயே இரண்டு சிறுவர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட செய்தி காட்டுத்தீயாகப் பரவி, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையின்படி, இரண்டு குழந்தைகளின் உடல்களிலும் கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்ட ஏராளமான காயங்கள் இருந்தன.

குறிப்பாக, 13 வயது சிறுவன் சஞ்சய்யின் உடலில் 25-க்கும் மேற்பட்ட கத்திக் குத்து காயங்கள் இருந்தன. சிறந்த குத்துச்சண்டை வீரரான சஞ்சய், தங்களைக் கடத்தியவர்களுடன் இறுதி மூச்சு வரை மிகக் கொடூரமாகப் போராடியதை அவனது கைகளில் இருந்த காயங்கள் உணர்த்தின. கீதாவின் மார்பு, தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கொடூரமான வெட்டுக் காயங்கள் இருந்தன.

கீதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தபோது, உடல் சிதைந்த நிலையில் இருந்ததால் மருத்துவர்களால் அதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், ஆரம்பத்தில் குற்றவாளிகள் அதை ஒப்புக்கொண்டு, பின்னர் நீதிமன்றத்தில் மறுத்தனர்.

கீதாவும் சஞ்சய்யும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நடத்திய சண்டையில் குற்றவாளிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றதே போலீசாருக்குக் கிடைத்த முதல் முக்கியத் தடயமாக அமைந்தது.

குற்றவாளிகளான குல்ஜீத் சிங் (என்ற ரங்கா) மற்றும் ஜஸ்பீர் சிங் (என்ற பில்லா) ஆகிய இருவரையும் பிடிக்க நாடு தழுவிய தேடுதல் வேட்டை தீவிரமாக்கப்பட்டது. அவர்கள் தலைமறைவாகி இரண்டு வாரங்கள் கழித்து, செப்டம்பர் 8 அன்று ஆக்ராவிலிருந்து டெல்லி நோக்கி வந்த ‘கால்கா மெயில்’ ரயிலில் ஏறினர்.

அவர்கள் தவறுதலாக ராணுவ வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏறியதே அவர்களுக்கு வினையாக முடிந்தது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த லான்ஸ் நாயக் குர்தேஜ் சிங் மற்றும் ஏ.வி. ஷெட்டி ஆகிய இரு ராணுவ வீரர்களிடம் ரங்காவும் பில்லாவும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.

அதிர்ஷ்டவசமாக, ராணுவ வீரர் குர்தேஜ் சிங்கிடம் அப்போது இந்தியாவின் மிக முக்கியக் குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய இந்தி நாளிதழ் ஒன்று இருந்தது. அதில் இருந்த புகைப்படமும், எதிரே அமர்ந்திருந்தவர்களின் முகமும் அச்சு அசலாகப் பொருந்துவதைக் கண்டு உஷாரான ராணுவத்தினர், ரயில் டெல்லியை அடைந்ததும் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ரத்தக் கறை படிந்த ஆடைகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, ரங்கா மற்றும் பில்லா ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. டெல்லி உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் இருவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அந்நாட்களில், குழந்தைகள் தனியாகப் பயணிப்பதும், அறிமுகமில்லாதவர்களிடம் ‘லிப்ட்’ கேட்பதும் சாதாரணமான ஒன்றாக இருந்தது. ஆனால், இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியப் பெற்றோர்களின் நம்பிக்கையையும் குலைத்தது. பொதுவெளியில் குழந்தைகளின் பாதுகாப்பு, காவல்துறை கட்டமைப்பு மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு குறித்த விவாதங்களை இந்த ‘பில்லா-ரங்கா’ வழக்கு இந்தியாவில் தொடங்கி வைத்தது.

சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றும் இந்தியாவின் மிகக் கொடூரமான குற்றப் பின்னணிகளைப் பேசும்போது ‘பில்லா-ரங்கா’ என்ற பெயர் மக்களின் நினைவுக்கு வருவதற்குக் காரணம், அந்தச் சம்பவம் ஏற்படுத்திய ஆழமான வடுதான்.

அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் அலி ஃபசல் மற்றும் சோனாலி பிந்த்ரே நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராக்’ வெப் தொடர் இந்தச் சம்பவத்தை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top