Close
ஜூன் 16, 2026 4:33 மணி

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கி வருகிறார்கள்.

அதன்படி  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 767  மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைமேற்கொண்டு ரூ.78,119 மதிப்பீட்டில் 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு காலிப்பர், ரூ.9855 மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகைக்கான காசோலையை 4 நபர்களுக்கும், தாட்கோ சார்பாக தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2 பணியாளர்களுக்கு அடையாள அட்டையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) சந்தோஷ் குமார், உதவி ஆணையர் (கலால்) செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சதீஷ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) இளவரசன், திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலன்) கலைச்செல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் செல்வம், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் மாலதி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணிசெய்யார்

மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவுறுத்தலின்படி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 67 மனுக்களும்,

செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 90 மனுக்களும், பெறப்பட்டு நடவடிக்கைமேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top