தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணின் வயிற்றில் இருந்து, ஒரு ராட்சத முடிப்பந்தை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
ஃபரிதாபாத்தில் உள்ள அம்ரிதா மருத்துவமனை டாக்டர்கள் இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சசி என்ற அந்தப் பெண், கடந்த பிப். மாதம் முதல் கடுமையான வயிற்று வலி, பசியின்மை, குமட்டல் மற்றும் சிறிதளவு சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்தது போன்ற அசௌகரியமான உணர்வால் பாதிக்கப்பட்டு வந்தார். பல மாதங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவ மையங்களுக்குச் சென்றார். ஆனால், அவரது பாதிப்புக்கான உண்மையான காரணம் எங்கும் கண்டறியப்படவில்லை.
இறுதியாக, அவர் ஃபரிதாபாத்தில் உள்ள அம்ரிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட விரிவான மருத்துவப் பரிசோதனையில், அவரது வயிற்றுக்குள் பல ஆண்டுகளாகச் சேர்ந்து வந்த ஒரு பெரிய ‘ட்ரைகோபெஸோயர்’ எனப்படும் வயிற்றில் திரண்டிருக்கும் தலைமுடியின் குவியல் இருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவ ரீதியாக இது ‘ட்ரைகோட்டிலோமேனியா’ என்ற மனநலக் குறைபாட்டுடன் தொடர்புடையது என்று டாக்டர்கள் விளக்குகின்றனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்குத் தங்கள் சொந்த தலைமுடியைப் பிடுங்க வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத எண்ணம் தோன்றும். இதில் சிலருக்கு, பிடுங்கும் முடியைச் சாப்பிடும் பழக்கமும் தொற்றிக் கொள்ளும். மனித உடலால் தலைமுடியைச் செரிக்க வைக்க முடியாது என்பதால், அது காலப்போக்கில் வயிற்றில் திரண்டு ஒரு பெரிய பந்து போல மாறி, கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மிகவும் தீவிரமான நிலைகளில், இந்த பாதிப்பு ‘ரபுன்ஸெல் சிண்ட்ரோம்’ என்ற அரிய மற்றும் ஆபத்தான நிலைக்கு மாறக்கூடும். நீண்ட கூந்தலைக் கொண்ட தேவதைக் கதையின் கதாபாத்திரமான ‘ரபுன்ஸெல்’ பெயரால் இது அழைக்கப்படுகிறது. இதில், முடியின் பெரும்பகுதி வயிற்றுக்குள்ளும், அதன் வால் போன்ற நீண்ட பகுதி சிறுகுடல் மற்றும் பெருங்குடல் வரை நீண்டு வழியடைப்பை ஏற்படுத்தும். இதனால் குடல் அடைப்பு, குடலில் ஓட்டை விழுதல் மற்றும் உயிருக்கே ஆபத்தான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அம்ரிதா மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த டாக்டர்கள் சசிக்கு ‘லேபரோடமி’ என்ற அறுவை சிகிச்சையைச் செய்து, அந்த ராட்சத முடிப்பந்தை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை வழங்கப்பட்டதால், அந்த ஏழைப் பெண்ணின் குடும்பத்திற்கு எவ்வித நிதிச் சுமையும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின் சசி நன்றாகக் குணமடைந்து, நான்காம் நாளே ஆரோக்கியமான நிலையில் வீடு திரும்பினார்.
மீண்டும் இந்த பழக்கம் தொடராமல் இருக்க, அவருக்குத் தொடர் மனநல ஆலோசனைகளும், நடத்தை சார்ந்த சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சாதாரண வயிற்று வலிக்கு பின்னால் இப்படியொரு அரிய மனநல மற்றும் உடல்நலப் பாதிப்பு மறைந்திருந்தது சசியின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




