Close
ஜூன் 25, 2026 1:46 காலை

உலகையே வடிவமைக்கும் பெங்களூரு தன்னை வடிவமைக்கவில்லை

பெங்களூரு நகரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் டிராபிக் நெரிசல்களும், உள்கட்டமைப்பு குறைபாடுகளும்தான். ஆனால், அதே பெங்களூருவை மையமாகக் கொண்டுதான் உலகின் அதிநவீன உள்கட்டமைப்புகள் பல வடிவமைக்கப்படுகின்றன

உலகின் முன்னணி மற்றும் மிகப்பெரிய ஐந்து உள்கட்டமைப்பு வடிவமைப்பு நிறுவனங்களான அர்காடிஸ், டபிள்யூஎஸ் அட்கின்ஸ், மோட் மெக்டொனால்டு, ஜேகப்ஸ் , சிஹெச்2எம் ஹில் ஆகியவை பெங்களூருவைத்தான் தங்களின் முதன்மைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களில் மட்டும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். லண்டன், நியூயார்க், துபாய் என உலகளாவிய பெருநகரங்களின் பிரம்மாண்ட பாலங்கள், சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வடிவமப்பது இந்த பெங்களூரு வல்லுநர்கள்தான்.

உலகையே வடிவமைக்கும் மிகச்சிறந்த திறமையாளர்கள் பெங்களூருவுக்குள்ளேயே அமர்ந்திருக்கும் போது, பெங்களூருவின் சொந்த உள்கட்டமைப்பு ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது என்பதுதான் இங்குள்ள மிகப்பெரிய சோகம்.

இது குறித்து அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகளிடம் பேசியபோது, கர்நாடகாவின் முதலமைச்சரோ அல்லது அரசாங்கமோ ஒரு கூட்டத்தைக் கூட்டி எங்களிடம் உதவி கேட்டால், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெங்களூரு நகரத்தை உலகத் தரத்திற்கு மாற்றுவதற்கு எந்தவொரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக உழைக்கத் தயாராக இருக்கிறோம் என்று  தெரிவித்துள்ளனர்.

ஆனால், நமது அரசியல் மற்றும் டெண்டர் நடைமுறைகள் திறமைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. அரசாங்கம் உலகத் தரம் வாய்ந்த உள்ளூர் திறமைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கர்நாடகாவுக்கு வெளியேயிருந்து குறைந்த ஏலத்தொகை கேட்கும்  மூன்றாம்தர ஒப்பந்ததாரர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறது. இதற்குப் பின்னணியில் தங்களுக்குச் சாதகமாக விஷயங்களை மாற்றியமைக்கலாம் என்ற சுயநல எண்ணமே காரணமாக இருக்கிறது.

இனிமேலாவது இந்த பழைய டெண்டர் முறையை மாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் உலகிலேயே மிகச்சிறந்த திறமையாளர்களைக் கொண்டு நம் சொந்த நகரங்களை வடிவமைக்க வேண்டும்.

பெங்களூருவின் புதிய தலைமைகள் மற்றும் பொறுப்பில் உள்ள தலைவர்கள் இந்த தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும். உலகையே வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற நிறுவனங்கள் நம் கைக்கு அருகிலேயே இருக்கும் அவற்றை அரசாங்கம் எப்போது பயன்படுத்தப் போகிறது?

எப்போது நமது சொந்த மண்ணின் திறமைகளை நம் நகரங்களின் வளர்ச்சிக்கு என்று பயன்படுத்துகிறோமோ  அன்றுதான் உண்மையான மாற்றம் சாத்தியமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top