தமிழகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் 1,000க்கும் மேற்பட்ட, மணல் சேமிப்பு கிடங்குகளை தடை செய்ய வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன, மாநில தலைவர் செல்ல ராஜாமணி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட குறிப்பாக மாதவரம், செங்குன்றம், திருவற்றியூர், மணலி, கொளத்தூர், மீஞ்சூர், அம்பத்தூர், சூரப்பட்டு, மதுரவாயல், வானகரம், குன்றத்தூர், போரூர், கொளப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் சேமிப்பு கிடங்கு அமைத்து இரண்டாம் விற்பனை செய்ய கனிம வளச்சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில், தனியார் மூலம் முறைகேடாக மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.
மணல் சேமிப்புக்கிடங்கு உரிமையாளர்கள் எம்.சேண்ட், பி.சேண்ட், மணல் ஆகிய கனிமங்களை லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்து சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைத்து, எம்.சேண்ட், பி.சேண்ட், உடன் கிரசர் கழிவுகளை கலந்தும், ஆந்திராவிலிருந்து மணல் ஏற்றி வந்து, மணலுடன் சிலிக்கான் மணல், கடல் மணலை கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை வாங்கி கட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் லாரிகளில் லோடு ஏற்றி விடுகின்றபோது லாரி உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு முறையான நடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்) மற்றும் ஜிஎஸ்டி பில் கொடுக்காமல் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். எத்தனை யூனிட் மணல் எடுக்கப்பட்டது, எத்தனை யூனிட் விற்பனை செய்யப்பட்டது என்று முறையாக கணக்குகளை அரசுக்கு சமர்ப்பிப்பதில்லை.
ஒவ்வொரு மாதமும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் மேற்படி ஸ்டாக் யார்டுகளுக்கு நேரில் சென்று ஆவணங்களை சரிபார்த்தும், இருப்பு விபரங்களை ஆய்வு செய்து நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் விட்டுவருகின்றனர்.
இதுபோன்ற முறைகேடான விற்பனையால், முறையாக கிரசர்களிலிருந்து கனிமங்களை விலை கொடுத்து, லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு லோடு எடுத்து வந்து விற்பனை செய்து வரும் எங்கள் சங்க உறுப்பினர்களால், அவர்களுடன் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை. இதனால் எங்கள் லாரிகளை இயக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளோம்.
எனவே தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நடைபெற்று வரும், மணல் சேமிப்பு கிடங்குகளை தடைசெய்ய வேண்டும். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்ட அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.



