Close
ஜூன் 27, 2026 2:09 காலை

நாமக்கல்லில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான மாரத்தான் ஓட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாமக்கல்லில் போதை பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டம்: 5,000 பேர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’ எனும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் துவக்க விழா நடைபெற்றது. நாமக்கல் காவல் கண்காணிப்பாளர்யாதவ் கிரீஷ் அசோக், டி.ஆர்.ஓ.,க்கள் சரவணன், கண்ணன், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து, மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழக முதல்வர் விஜய், போதை இல்லா தமிழகம் என்ற உயரிய இலக்கை முன்வைத்து, இளைஞர்களின் உடல் நலம், மனநலம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

அதன் முக்கிய அங்கமாக, போதை எதிர்ப்பு ஓட்டம் நடத்தப்பட்டது. போதைப்பொருள் மனிதனின் திறமையையும், குடும்பத்தின் மகிழ்ச்சியையும், சமூகத்தின் முன்னேற்றத்தையும் சீரழிக்கிறது. அதே நேரத்தில், விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறைகள், இளைஞர்களை நல்ல பாதையில் வழி நடத்துகின்றன.

இங்கு கூடியுள்ள நாம் அனைவரும், போதைப்பொருளுக்கு எதிராக உறுதியுடன் நிற்போம். நம் இளைஞர்களை பாதுகாப்போம். ஆரோக்கியமான, விழிப்புணர்வுமிக்க, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வரின் கனவை நனவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பேசினார்.

தெற்கு அரசு பள்ளியில் துவங்கிய மாரத்தான் ஓட்டம், மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு, கோட்டை ரோடு, மெயின் ரோடு வழியாக பழைய ஸ்டாண்ட் அருகே உள்ள குளக்கரை திடலில் முடிந்தது. அதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் உள்பட, 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top