தமிழ் மொழியை செம்மொழி ஆவதற்கு முதன் முதலில் குரல் கொடுத்தவர் மதுரை விளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி. இவர் தனது பெயரை தமிழ் மேல் கொண்ட பற்றால் பரிதிமாற் கலைஞர் என பெயர் மாற்றம் செய்தார்.
பரிதிமாற் கலைஞர் நினைவை போற்றும் விதமாக அவரது இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆண்டு தோறும் பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அவரது 157 வது பிறந்தநாள் விழாவினையடுத்து, அரசு நெறிமுறைகளின்படி பரிதிமாற் கலைஞரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அரசு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன், மதுரை கிழக்குத் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கார்த்திகேயன், தெற்கு தொகுதி தவெக எம்எல்ஏ கோபிசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
அதனைத் தொடர்ந்து, பரிதிமாற் கலைஞரின் வம்சாவளி பேரன் கிருஷ்ணன் தனது மனைவியுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கூறுகையில்:
சூரிய நாராயணர் சாஸ்திரி என்ற பெயரை தமிழ் மேல் கொண்ட பற்றால் பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டவர். தமிழ் செம்மொழியாக வேண்டுமென முதல் குரல் கொடுத்தவர். அவரது பெருமையை போற்றும் விதமாகவும் தமிழை வளர்க்கும் விதமாகவும் அவரது நினைவு தினம் கொண்டாடப்படுகிறது என கூறினார்.




