Close
செப்டம்பர் 7, 2026 6:58 மணி

இஸ்ரோவில் தொடரும் விஞ்ஞானிகள் ராஜினாமா: பின்னணியில் இருக்கும் காரணங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது ஒரு புதிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. இது ஏவுகணை தோல்விகளோ அல்லது தொழில்நுட்பக் குறைபாடுகளோ அல்ல; மாறாக, அனுபவம் வாய்ந்த திறமையான விஞ்ஞானிகள் இஸ்ரோவை விட்டு வெளியேறும் விவகாரம் விண்வெளித் துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இஸ்ரோவிலிருந்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது விண்வெளித் துறையில் ஒரு நெருக்கடியாகப் பார்க்கப்பட்டாலும், இந்தியப் பொறியாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பிற்கான கதவையும் திறந்துவிட்டுள்ளது

கடந்த சில மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் அல்லது விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இதன் காரணமாக, இந்தியாவின் மிக முக்கியமான விண்வெளித் திட்டங்களான ‘ககன்யான்’ போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளின் ராஜினாமாவை உடனடியாக ஏற்கக் கூடாது என்றும், விண்வெளித் துறையின் நேரடி அனுமதி பெற்றே அவர்கள் வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு தற்பொழுது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவின் விண்வெளி கனவுகள் உலகளவில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், விஞ்ஞானிகள் ஏன் இஸ்ரோவை விட்டு வெளியேறுகிறார்கள்? இதற்கான முக்கியக் காரணங்கள் என்ன?

கடந்த 2020 ஆம் ஆண்டு இஸ்ரோ ‘விருப்ப ஓய்வு திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. இதன்படி விஞ்ஞானிகள் தங்களின் அதிகாரப்பூர்வ பணி ஓய்வு வயதிற்கு முன்பாகவே, கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு ஓய்வு பெற வழிவகை செய்யப்பட்டது. இதன் காரணமாகவே பல மூத்த விஞ்ஞானிகள் தற்பொழுது விருப்ப ஓய்வு பெற்று வருவதாகக் கூறப்படுகிறது

2023ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த ‘இந்திய விண்வெளி கொள்கை’ இந்திய விண்வெளித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கொள்கைக்குப் பிறகு, இந்தியாவில் மட்டும் சுமார் 400 விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,200 நிறுவனங்கள் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றன. 2025ம் ஆண்டில் மட்டும் இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 150 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகள் குவிந்துள்ளன

2020ம் ஆண்டு இந்தியாவில் விண்வெளித் துறை தனியார் பங்களிப்பிற்கு திறந்துவிடப்பட்ட பிறகு, ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’, ‘அக்னிகுல் காஸ்மாஸ்’, ‘பிக்ஸல்’ போன்ற பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

இந்த புதிய நிறுவனங்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கவும், தொழில்நுட்பங்களை வழிநடத்தவும் விண்வெளித் துறையில் அனுபவமிக்க விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே தளம் இஸ்ரோ மட்டுமே. இந்தத் தனியார் நிறுவனங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பல மடங்கு கூடுதல் ஊதியம், நிறுவனப் பங்குகள் மற்றும் பணியில் அதிக சுதந்திரம் ஆகியவற்றை வழங்குகின்றன.

அரசு நிறுவனங்களைப் போலன்றி, இங்கு முடிவுகள் மிக வேகமாக எடுக்கப்படுவதும், இளம் வயதிலேயே தலைமைப் பொறுப்புகள் கிடைப்பதும் விஞ்ஞானிகளை வெகுவாகக் கவர்கிறது. மேலும், இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் பலர் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருப்பதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களின் அடுத்தகட்ட வேலைவாய்ப்பிற்கு இந்த நிறுவனங்களை எளிதாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

சமீபகாலமாக இஸ்ரோவின் முக்கியத் திட்டங்கள் பல அறிவிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டி தாமதமாகி வருகின்றன. ‘ககன்யான் G1’ சோதனை ஓட்டம், SSLV-L1, GSLV-F17 மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் PSLV-N1 போன்ற பல திட்டங்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இரட்டை பிஎஸ்எல்வி பின்னடைவுகளும் ஏவுதல் பணிகளை மேலும் தாமதப்படுத்தியுள்ளன. விஞ்ஞானிகள் தங்கள் உழைப்பிற்கான பலனை களத்தில் பார்க்க அதிக காலம் காத்திருக்க வேண்டிய சூழல் இங்கு நிலவுகிறது.

இஸ்ரோவின் நிர்வாகத்தில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் கொள்கை முடிவுகள் அனைத்தும் ‘தலைவர் அலுவலகத்தில்’ மட்டுமே குவிந்திருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத சில தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் திட்டங்களுக்கான ஒப்புதல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதோடு, விஞ்ஞானிகளுக்கான செயல்பாட்டு சுதந்திரமும் குறைகிறது.

நாசா மற்றும் ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி போன்ற சர்வதேச விண்வெளி அமைப்புகளைப் போல இஸ்ரோவும் தனது பணியாளர் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். நாசாவில் நிரந்தர அரசு ஊழியர்களுடன் சேர்த்து, குறிப்பிட்ட திட்டங்களுக்கான ஒப்பந்தப் பணியாளர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த ஹைப்ரிட் முறையை இஸ்ரோவிலும் கொண்டு வருவதன் மூலம் திறமையான விஞ்ஞானிகளைத் தக்கவைக்க முடியும் என்று விண்வெளி கொள்கை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இஸ்ரோவில் மொத்தம் 14,600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இதில் 100 பேர் என்பது சிறிய எண்ணிக்கையாகத் தோன்றினாலும், வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் சந்திரயான்-3, ஸ்பேடெக்ஸ் மற்றும் ககன்யான் போன்ற முக்கியத் திட்டங்களில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த முதன்மை விஞ்ஞானிகள் ஆவர். இவர்களின் பல வருட விண்வெளி அனுபவத்தையும் அறிவையும், புதிதாகப் பணியில் சேரும் இளம் பட்டதாரிகளால் உடனடியாக ஈடுசெய்ய முடியாது.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஏஐ, மெஷின் லேர்னிங், மற்றும் டேட்டா சயின்ஸ் போன்ற துறைகளை நோக்கியே ஓடுகிறார்கள். ஆனால், உலகளவில் விண்வெளித் துறை வேகமாகத் தனியார்மயமாக்கப்பட்டு வருவதால், ‘விண்வெளி கல்வி’ சார்ந்த தகுதிகளுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது

பல ஆண்டுகளாக இந்தியாவின் விண்வெளிப் பொறியாளர்களுக்கு இஸ்ரோ மட்டுமே ஒரே புகலிடமாக இருந்தது. ஆனால் இன்று தனியார் துறையின் அசுர வளர்ச்சியால், விஞ்ஞானிகளுக்குப் பல மாற்று வழிகள் உருவாகியுள்ளன. எனவே, நாட்டின் சிறந்த மூளைகளைத் தன் வசம் ஈர்ப்பது மட்டுமல்லாமல், அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதும் இஸ்ரோவிற்கு இனிவரும் காலங்களில் பெரும் சவாலாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top