இந்திய வணிக வாகனத்துறை பல ஆண்டுகளாக டீசல் எரிபொருளையே முதன்மையாக நம்பியிருந்தது. ஒரு வாகனத்தின் மதிப்பு என்பது அது எவ்வளவு எடையைச் சுமக்கிறது மற்றும் எவ்வளவு நேரம் தடங்கலின்றி இயங்குகிறது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இந்திய வர்த்தக வாகனத் துறை தற்போது டீசலில் இருந்து மின்சாரத்தை நோக்கி அதிவேகமாக உருமாறி வருகிறது.
இந்திய அரசு மின்சார வாகன பயன்பாட்டைத் துரிதப்படுத்த பல தொலைநோக்குத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது:
பேருந்துகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பேட்டரி உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியை உள்நாட்டிலேயே பலப்படுத்த உதவக்கூடிய முக்கிய முயற்சி. நாட்டின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மின்சாரப் பேருந்துகளை இயக்கி, பொதுப் போக்குவரத்தைப் பசுமையாக்கும் முயற்சி என பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 5%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கைகள் வெறுமனே வாகனக் கொள்முதலுக்கு மானியம் வழங்குவதோடு நிற்பதில்லை; மாறாக, உள்நாட்டு உற்பத்தி மற்றும் சார்ஜிங் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன.
இந்த மாற்றம் அனைத்து வகை வர்த்தக வாகனங்களிலும் ஒரே வேகத்தில் நிகழவில்லை. சிறிய வணிக வாகனங்கள்: இ-காமர்ஸ், விரைவு விநியோகம் மற்றும் உள்ளூர் விநியோக நிறுவனங்களின் வளர்ச்சியால் 1-டன் மற்றும் அதற்கும் குறைவான திறன் கொண்ட மின் சரக்கு வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
டாடா ஏஸ் ஈவி, மஹிந்திரா ட்ரியோ ஜோர் போன்ற வாகனங்கள் நகரங்களுக்குள்ளான போக்குவரத்தில் முன்னணி வகிக்கின்றன. டீசலை விடக் குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் செயல்பாட்டுச் செலவு ஆகியவை இதற்குக் முக்கியக் காரணம்.
மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் மின் பேருந்துகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள்
நீண்ட தூரப் பயணம் மற்றும் அதிகப் சுமை சுமக்கும் லாரிகளை மின்மயமாக்குவது இன்னும் சவாலான காரியமாகவே உள்ளது. இருப்பினும், பசுமைப் போக்குவரத்து இலக்கை அடைய இந்தத் துறையிலும் மின்சார லாரிகளின் அறிமுகம் தீவிரமடைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மற்றும் புதிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றன:
- டாடா மோட்டார்ஸ் சிறிய ஏஸ் ஈவி முதல் பெரிய மின்சாரப் பேருந்துகள் வரை பரவலான தயாரிப்புகளுடன் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளது.
- அசோக் லைலேண்ட் தனது ‘சுவிட்ச் மொபிலிட்டி’ வாயிலாக மின்சாரப் பேருந்துகள் மற்றும் நடுத்தர லாரிப் பிரிவில் கால்பதித்து வருகிறது.
- மஹிந்திரா மூன்று சக்கர மற்றும் சிறிய வணிக வாகனப் பிரிவில் தனக்கென வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.
- யூலர் மோட்டார்ஸ், அல்டிகிரீன் போன்ற புதிய நிறுவனங்கள் பிரத்யேக மென்பொருள் மற்றும் நவீன வாகன வடிவமைப்புடன் சந்தையில் போட்டிபோடுகின்றன.
மின்வணிக வாகனங்களின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும், சில முக்கியச் சவால்கள் நிலவுகின்றன. பேட்டரி செல்கள், பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மோட்டார்கள் இன்னும் பெருமளவில் இறக்குமதியை குறிப்பாக சீனாவை நம்பியே உள்ளன. இது தயாரிப்புச் செலவை உயர்த்துகிறது.
நகரங்களுக்குள் சார்ஜிங் மையங்கள் அதிகரித்து வந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக லாரிகளுக்கான அதிவேக சார்ஜிங் மையங்கள் இன்னும் போதிய அளவில் இல்லை.
400 கிலோமீட்டருக்கு மேல் அதிக எடையுடன் செல்லக்கூடிய கனரக மின்சார லாரிகள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன.
இந்திய வர்த்தக வாகனத் துறையானது ‘தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த’ அமைப்பாக உருவெடுத்து வருகிறது. டெலிமேடிக்ஸ், ஜிபிஎஸ் கண்காணிப்பு, பேட்டரி மேலாண்மை மென்பொருள் போன்றவை மேலும் எளிமையாக்கியுள்ளன.
உள்நாட்டு பேட்டரி உற்பத்தி அதிகரிக்கும் போதும், நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்கள் பரவலாகும் போதும், வர்த்தக வாகனத் துறையில் மின்சாரத்தின் பயன்பாடு முழுமையான நிலையை எட்டும். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புடன் கூடிய குறைந்த இயக்கச் செலவு, இந்தியப் போக்குவரத்துத் துறையை ஒரு புதிய பசுமைப் பாதைக்கு நிச்சயமாக அழைத்துச் செல்லும்.




