ஈரோடு திண்டலில் அமைந்துள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (தன்னாட்சி) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் துறை மற்றும் ஏவியேஷன் ரோபாடிக்ஸ் கிளப் சார்பில் ‘யுகாந்திரா ’26’ என்ற பிரம்மாண்ட தொழில்நுட்ப நிகழ்வு கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 17, 2026 அன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டது.
மாணவர்களுக்குச் செய்முறை கற்றல், புதுமைச் சிந்தனை மற்றும் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் இக்கருத்தரங்கமும் செய்முறைப் பயிற்சியும் அமைக்கப்பட்டிருந்தன.
விழாவின் தொடக்கமாக, மின்னணுவியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் நிஷா ஏஞ்சலின் அனைவரையும் வரவேற்றார். வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் சந்திரசேகர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்யுவராஜா ஆகியோர் தலைமை தாங்கி உரையாற்றினர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெயராமன் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்திப் பேசினார்
இந்நிகழ்வில் சென்னை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவைச் சேர்ந்த முனைவர் பொற்கொடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்கவுரையாற்றினார். ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், அதன் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் விண்வெளி, ஆளில்லா விமான அமைப்புகள் சார்ந்த துறைகளில் எதிர்காலத்தில் உருவாக உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 600 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ட்ரோன் போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு தங்களது தொழில்நுட்பத் திறமை, குழுப்பணி மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்தின.
வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள்:
முதல் பரிசு (ரூ. 7,000): கோயம்புத்தூர் KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த DK UVIRA அணி வென்றது.
இரண்டாம் பரிசு (ரூ. 3,000): கொங்கு பொறியியல் கல்லூரி (ஈரோடு) மற்றும் காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இணைந்து உருவாக்கிய FALCON அணி தட்டிச் சென்றது.
பொறியியல் மாணவர்களிடையே செய்முறை கற்றல் மற்றும் நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளை ஊக்குவிப்பதில் ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதை இந்த ‘யுகாந்திரா ’26’ நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.




