அரசு கார் தேவையில்லாத எம்எல்ஏக்களுக்கு, காருக்கான நிதியை, தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கொமதேக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டசபையில் கடந்த சில நாட்களாக, எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவது பற்றி பல தரப்பட்ட விவாதங்கள் நடந்துகொண்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் விமர்சனங்களும், மாறுபட்ட கருத்துக்களும் நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பல எம்எல்ஏக்கள் தங்களுக்கு தேவையான வசதி இருக்கின்றன. கார் தேவை இல்லை என்று நேரடியாக அறிவித்துள்ளனர். இதை தமிழக அரசு ஆக்கபூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசு காருக்காக நிதி கொடுக்க முன்வந்தும் அதை வேண்டாமென்று கூறியிருக்கின்ற எம்எல்ஏக்களை, சட்சபையில் பாராட்ட வேண்டும். கார் தேவையில்லாத எம்எல்ஏக்களுக்கு, காருக்கான நிதியை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் சேர்த்து வழங்க வேண்டும். அவரவர் தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக அந்த நிதியை எம்எல்ஏக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
எம்எல்ஏக்கள் அரசு கார் பெறுவதை தவிர்ப்பதை, அரசின் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறப்பட்டுள்ளது.




