நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 15வது வார்டு நடராஜபுரம், சுப்ரமணியபுரத்தில் சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நவகிரகங்கள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடைபெற்றது.
திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து ஆக. 23ம் தேதி காலை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை காலை 6:00 மணிக்கு, திரளான பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்று, புனித நீராடி, தீர்த்தக்குடங்களை எடுத்துக் கொண்டு வந்தனர்.
நாமக்கல் – மோகனூர் ரோட்டில் ஐயப்பன் கோயிலில் இருந்து குதிரை முன்னேவர, தீர்த்தக்குடம் ஊர்வலம் புறப்பட்டு, மணிக்கூண்டு, துறையூர் ரோடு வழியாக சென்று கோயிலை அடைந்தது.
மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், முதல்கால யாக பூஜை நடைபெற்றது. இரவு 8:00 மணிக்கு அஷ்டபந்தனம், விக்ரஹ பிரதிஷ்டை, மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
நாளை ஆக.23, அதிகாலை, 5:30 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று, புனித நீர் அடங்கிய தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, காலை 7.30 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.
தொடர்ந்து மூலாலய கும்பாபிஷேகம் நடைறும். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும்.




