நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, நல்லிபாளையம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றுப்புறப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா நடந்தது.
மிளிரும் நாமக்கல் அமைப்பு சார்பில், நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, நல்லிபாளையம் ஏரியில் உள்ள தேவையற்ற புதர்கள் மற்றும் மண் படிமங்கள் அகற்றப்பட்டு, ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி துவக்க விழா நடந்தது.
எம்.எல்.ஏ., திலீப் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை வகித்து, தூர் வாரும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது:
நல்லிபாளையம் பகுதியில் உள்ள, 13 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்துவதன் மூலம், மழைக்காலங்களில் அதிக அளவு நீரை சேமிக்க முடியும். இதன் மூலம், ஏரியின் நீர்த்தேக்க கொள்ளளவு அதிகரிப்பதுடன், அவற்றை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என கூறினார்.
விழாவில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்; ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க வேண்டும்; ஏரிகளை தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மிளிரும் நாமக்கல் அமைப்பின் தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் வக்கீல் வேல், பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




