கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் வைணவ தேசங்களில் புகழ்பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருக்கோயில் மிகவும் புகழ்பெற்ற வைகாசி பிரம்மோற்சவத்தில் 63 அடி திருத்தேரில் ஏழாம் நாள் காஞ்சி நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் இதில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுவர்.
இந்நிலையில் 300 ஆண்டுகள் பழமையான இந்த திருத்தேருக்கு பதிலாக புதிய செய்யும் பணி கடந்த ஆண்டு சட்டமன்ற பேரவை கூட்டத்தின் போது ரூபாய் 4.5 கோடி மதிப்பீட்டில் தனி நபர் ஒருவரின் கைங்கரியத்தால் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில், புதிய திருத்தேர் செய்யும் பணி இன்று திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா, காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரத்துரை உள்ளிட்டோர் பங்கேற்று பணிகளை சிறப்பு பூஜைகளுடன் துவக்கி வைத்தனர்.

இத்திருத்தேர் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் ஸ்தபதி கதிரவன் கூறுகையில், 63 அடி உயரமும் 25 அடி 5 அங்குலம் அகலமும் கொண்ட தொண்டை மண்டல பாரம்பரிய முறைப்படி இத்திருத்தேர் அமையும். ஏழு நிலை கொண்ட இந்த தேர் பணிகளை 60 பேர் கொண்ட குழுவினர் ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்கும் வகையில் இது அமையும். தேர் நிலைகளுக்கு ஏற்ப மரங்களின் பயன்பாடு இதில் இருக்கும் . முற்றிலும் இது புதிய தேர் என தெரிவித்தார்.




