தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சல்களை திறம்பட எதிர்கொள்ளும் நோக்கில், தமிழக சுகாதாரத் துறை செயலாளரின் வழிகாட்டுதலின்படி இக்கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்நிகழ்வு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற அமர்வில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்களான பொது மருத்துவர் டாக்டர் சிவசுந்தர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் முத்து ராமசுப்பிரமணியம் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு மருத்துவர் காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் “குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான டெங்கு காய்ச்சலின் மேம்பட்ட மேலாண்மை” என்ற தலைப்பில் விரிவான சிறப்புரையாற்றினர்.
இக்கருத்தரங்கில், டெங்கு காய்ச்சலின் ஆரம்பகால அறிகுறிகள், நவீன பரிசோதனை முறைகள், தொடக்க நிலை சிகிச்சைகள், ஆபத்தான அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் முறைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் குருநாதன் கந்தையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காய்ச்சல் தடுப்புப் பணிகளில் மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். மேலும், நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா மற்றும் சுகாதார அலுவலர் மருத்துவர் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்று டெங்கு பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினர்.
கருத்தரங்கின் போது, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தப் பின்வரும் தடுப்பு நடவடிக்கைகளைப் பொதுமக்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது:
- வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல்.
- கொசுக்கள் உற்பத்தியாகும் சாத்தியக்கூறுகளை உடனுக்குடன் கண்டறிந்து அழித்தல்.
- காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுதல்.
இக்கருத்தரங்கில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த சுமார் 200 மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.




