பரந்தூரில் சர்வதேச விமான நிலையத் திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் உள்ள காஞ்சிபுரம் வர்த்தக சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில், காஞ்சிபுரம் வர்த்தக சங்கத் தலைவர் தங்கமணி, செயலாளர் சிங்காரவேலன், பொருளாளர் அமீர் பாஷா, முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வர்த்தக சங்க நிர்வாகிகள், பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பட்டு மற்றும் கைத்தறி தொழில், சிறு மற்றும் குறுந்தொழில்கள், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு விமான நிலையத் திட்டம் பெரும் பயனளிக்கும் என்றும், புதிய தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினர்.
அருகிலுள்ள ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை இணைக்கும் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக வணிகம் பெருகும் வாய்ப்பு உள்ளது.
மேலும், கடந்த ஜூன் 27ம் தேதி நடைபெற்ற காஞ்சிபுரம் வர்த்தக சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் நீண்டகால வளர்ச்சி மற்றும் நலனை கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் எவ்வித அகங்காரமும் பார்க்காமலும்,அரசியலை பார்க்காமலும், கைவிடபட்ட பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தை விரை மீண்டும் பரிசீலனை செய்து செயல்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோருக்கும் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் காஞ்சிபுரம் பொதுமக்களோடு இணைந்து வர்த்தக சங்க நிர்வாகிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




