Close
ஆகஸ்ட் 25, 2026 10:23 மணி

காஞ்சிபுரம் அருகே தொன்மைமிக்க மகாவீரர், புத்தர் சிலைகளைப் பாதுகாக்க தொல்லியல் துறைக்குக் கோரிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பூதூர் கிராமத்தில், இருளர் சமுதாயக் குடியிருப்பு அருகே நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றுச் சின்னம் ஒன்று போதிய பராமரிப்பின்றிச் சிதைந்து வருகிறது. முன்னோர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவில், தற்போது முற்றிலும் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

இக்கோவிலின் உட்பகுதியில் பழமை வாய்ந்த மகாவீரர் மற்றும் புத்தர் பெருமானின் ஒரே மாதிரியான அரிய சுவாமி சிலைகளும், வெளிப்புறத்தில் பலிபீடம் ஒன்றும் அமைந்துள்ளன. தொன்மைச் சிறப்பு மிக்க இச்சிலைகள் தகுந்த பாதுகாப்பின்றி, கூரையோ தடுப்புகளோ இல்லாத திறந்தவெளியில் மழையிலும் வெயிலிலும் பாழடைந்து வருகின்றன.

கடந்த காலங்களில் இப்பகுதியில் சமண (ஜெயின்) சமூக மக்கள் திரளாக வாழ்ந்து வந்துள்ளனர். காலப்போக்கில் அவர்கள் வாழ்வாதாரம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மகாவீரர் மற்றும் புத்தர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தி வந்திருக்கலாம் என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஒரே வளாகத்தில் சமண மற்றும் பௌத்த சமயச் சான்றுகள் அருகருகே காணப்படுவது வரலாற்று ரீதியாக மிக முக்கியமான ஒன்றாகும்.

பழங்கால வரலாற்றையும் பண்பாட்டையும் பறைசாற்றும் இத்தகைய தொல்லியல் சான்றுகள் அழிவின் விளிம்பில் இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக வரலாற்று ஆய்வாளர்களும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரும் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

சிதைந்து வரும் இக்கோவிலைச் சீரமைத்து, மகாவீரர் மற்றும் புத்தர் சிலைகளைப் பாதுகாப்பாக அருங்காட்சியகத்திலோ அல்லது உரிய பாதுகாப்பு கூரை அமைத்தோ பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top