நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது அலுவலகத்தில் ரூ.44 ஆயிரத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலராக தங்க விக்னேஷ் உள்ளார். இந்த அலுவலகத்தில் உள்ளோர் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், உணவு வணிக நிறுவனங்கள், பரமத்தி வேலூரில் செயல்படும் வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளிட்டவற்றில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கின்றனர்.
ஆய்வின்போது விதிமுறை மீறல்கள் இருந்தால் அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்வர். இந்நிலையில் இன்றுமாலை இந்த அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த வெளிநபர்களிடம் ரூ.44 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்துள்ளது.
அந்த பணத்தை கைப்பற்றிய காவல்துறையினர் அத்தொகை எதற்காக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது என அங்குள்ள அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அலுவலக கோப்புகளையும் கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர்.
மாலை 4 மணிக்கு தொடங்கி்ய சோதனை மாலை 7 மணியைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட விவரம் தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.




