Close
ஆகஸ்ட் 30, 2026 12:51 மணி

நாமக்கல்லில் இந்திய பால்வள அறிவியலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் சங்கம் தொடக்கம்

பால்வள அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் செயல்பாடுகளுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும், தேசிய அளவிலான அமைப்பான இந்திய பால்வள அறிவியலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் சங்கம் தொடக்க விழா, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் செல்வராஜூ தலைமை வகித்தார். கல்லூரி முன்னாள் இயக்குனர் ராமசாமி, இந்திய கால்நடை பராமரிப்பு துறையின் முன்னாள் கமிஷனர் சுரேஷ் ஹொன்னப்பகோல், தனியார் தீவன ஆலை நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டீஸ்கர் கவர்னரின் செயலாளரும், கூட்டுறவுத்துறை செயலாளருமான, பிரசன்னா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சங்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தும், பால் வளத் துறையில் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘டைரிபிட்ஸ்’ மொபைல் அப்ளிகேஷனை அவர் வெளியிட்டார்.

இந்திய பால்வள அறிவியலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் சங்கத்தின் தலைவராக, சேலம் கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் இளங்கோ, துணைத்தலைவராக நாமக்கல் பால்வளத்துறை தலைவர் குமரேசன், பொதுச்செயலாளராக கார்த்திகேயன், பொருளாளராக புதுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பால் அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top