Close
செப்டம்பர் 1, 2026 7:54 மணி

கல்லூரியில் படிக்கும்போதே மாணவ மாணவிகள் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும்: கலெக்டர்

மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் படிக்கும்போதே தங்களின் திறமையை வளர்த்துக்கொண்டு ஆளுமை மிக்கவர்களாக உருவாக வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் அறிவுறை வழங்கினார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், கல்லூரி மாணவியர் பேரவைத் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பாரதி வரவேற்றார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் பேரவையைத் துவக்கி வைத்து பேசியதாவது:

கல்லூரிப் பேரவையின் மூலம், 13 துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவப் பிரதிநிதிகள், பதவியில் இருப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், சக மாணவியரின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்து, கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இது நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு.

துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மூலம், மாணவியரின் தேவைகளை முறையாகக் கொண்டு சென்று, கல்லூரியிலும், மாணவியர் மத்தியிலும், ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

பொதுவாக, கல்லூரியில் படிக்கும் காலம் என்பது, 3 ஆண்டு பட்டப்படிப்பாகவோ அல்லது 2 ஆண்டு முதுகலை படிப்பாகவோ இருக்கும். 3 ஆண்டுகள் கல்லூரியில் எப்படிப் போகிறது என்றே தெரியாது. கல்லூரி நாட்கள் விரைவாக பறந்துவிடும். 3 ஆண்டுகள் என்பது, வெறும் 1,000 நாட்கள் தான். எனவே, நாம் ஒவ்வொரு நாளும், கல்லூரிக்கு வரும்போதும், இந்த, 1,000 நாட்களில் நமது திறமைகளை வளர்த்துக்கொண்டு, எப்படி ஒரு சிறந்த ஆளுமையாக மாற்றிக்கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது.

இந்த வயதில், உங்கள் ஆளுமையை நீங்கள் எவ்வாறு வளர்த்துக்கொள்கின்றீர்களோ, அது உங்கள் வாழ்நாள் முழுமைக்கும், உங்கள் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொள்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் அனைவருமே தலைவர்கள்தான். கல்லூரியை விட்டு வெளியே செல்லும்போது, ஒரு தலைவனுக்குரிய பண்புகளோடும், நல்ல குடிமகனாகவும், சிறந்த ஆளுமை மிக்கவர்களாகவும் வெளியே செல்ல வேண்டும் என்பதுதான் கல்லூரி பேரவையின் நோக்கம் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top