Close
செப்டம்பர் 1, 2026 7:56 மணி

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்பு!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 17-ம் தேதி (புதன்கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கம்பீரமான ராஜகோபுரங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

கடந்த 1983-ம் ஆண்டுக்கு முன்பு வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒரே நிர்வாகத்தின்கீழ் இயங்கி வந்தன. அக்காலத்தில் நடைபெறும் கும்பாபிஷேக விழாக்களில் திருப்பரங்குன்றம் முருகன் பங்கேற்பது வழக்கம். 1983 நவம்பருக்குப் பிறகு திருப்பரங்குன்றம் கோயில் தனி நிர்வாக அந்தஸ்து பெற்றபோதிலும், இந்த மரபு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

விழா நிகழ்வுகள் மற்றும் நேர அட்டவணை:

16-ம் தேதி (காலை 9.30 மணி): மேளதாளங்கள் முழங்க திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை நோக்கி முருகப்பெருமான் – தெய்வானை அம்பாள் புறப்பாடு.

16-ம் தேதி (இரவு) மதுரை மீனாட்சி பட்டணத்தில் சுவாமிக்குச் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி.

17-ம் தேதி (காலை 7.40 – 8.10 மணி): மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் கோயில் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம்; பெற்றோர் அருளைப் பெறும் முருகன்.

17-ம் தேதி (இரவு 7.00 மணி) பெற்றோரிடம் விடைபெற்று, மதுரையில் நகர்வலம் வந்து மீண்டும் திருப்பரங்குன்றம் இருப்பிடம் திரும்புதல்.

திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானையும் தெய்வானை அம்பாளையும் வரவேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கான அனைத்துப் பணிகளையும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top