தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களுக்குள், பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்ல ஏற்கெனவே தடை உள்ளது. எனினும், விதிகளை மீறி கோயில் வளாகத்துக்குள் போட்டோ, வீடியோ, செல்ஃபி எடுப்பது, ரீல்ஸ் எடுத்து வெளியிடுவது போன்வற்றால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது . மேலும் கோயிலின் புனிதம் பாதிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செப். 1 முதல் தமிழகத்ததில் உள்ள முருகனின் அறுபடை வீடுகள், மதுரை மீனாட்சியம்மன், ராமேசுவரம் ராமநாத சுவாமி, நாமக்கல் நரசிம்மசாமி மற்றும் ஆஞ்சநேயர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உட்பட 52 முக்கிய கோயில்களில், செப். 1 முதல் செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதது.
இதையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த ஒரு வாரமாக செல்போன் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கோயில் முன்பு, பக்தர்கள் காலணிகள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த அறை தற்போது செல்போன் பாதுகாப்பு அறையாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக 120 பாதுகாப்பு பெட்கங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கான சாவி மற்றும் டோக்கன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல் போன்களைப் பாதுகாப்பாக வைக்க கட்டணமாக ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கோயில் சார்பில் ரசீது வழங்கப்படும்.
சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து டோக்கன்களை கொடுத்து பக்தர்கள் தங்களின் செல்போன்கள் மற்றும் கேமராக்களை பெற்றுச்செல்லலாம். தடையை மீறி கோயிலுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு சென்று போட்டோ, வீடியோ, ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது உடனடியாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவற்றை கண்காணிக்கத் தவறும் கோயில் அலுவலர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறிநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.




