உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 5-வது நாளாகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தின. கிடங்குகள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களால் சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பொருட்கள் காலியாகி வரும் நிலையில், ரஷ்யாவின் அதிவேக ஜெட்-எஞ்சின் ட்ரோன் தாக்குதல்களால் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், சமீபத்திய மாதங்களில் ரஷ்யா தன் வான்வழித் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கீவ் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஒலிக்கும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளன.
கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட இரண்டு முக்கியத் தாக்குதல்களில் சுமார் 50 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த சனியன்று நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 38 பேர் பலியாகினர்.
உக்ரைன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருந்தபோதிலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பள்ளிகளில் வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் பாதாள புகலிடங்கள் உள்ளன, மேலும் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்த முடியும். தற்போது உக்ரைனையும், முக்கியமாக எங்கள் மக்களையும் சோர்வடையச் செய்வதே ரஷ்யாவின் தந்திரமாக உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.
மறுபுறம், உக்ரைனும் ரஷ்யாவின் முக்கிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தி, போரின் தாக்கத்தை ரஷ்ய மக்களுக்கு உணர்த்த முயன்று வருகிறது. இந்தத் தாக்குதல்கள் சாதாரண ரஷ்யர்களுக்குப் பொருட்கள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள போதிலும், உக்ரைனைப் போல ரஷ்யப் பொதுமக்கள் உயிரிழப்பது பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.
கீவ் பிராந்தியத்தைச் சேர்ந்த புரோவரி மற்றும் போரிஸ்பில் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் பல கிடங்குகள் சேதமடைந்தன, 4 பேர் காயமடைந்தனர்
ரஷ்யாவின் அதிகரித்து வரும் அதிவேக ஜெட்-எஞ்சின் ட்ரோன்களைக் கட்டுப்படுத்த உக்ரைன் போராடி வருவதாக ஜெலென்ஸ்கி சமூக வலைதளத்தில் ஒப்புக்கொண்டார். ரஷ்யா உக்ரைனை நோக்கி சுமார் 1,500 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் சுமார் 800 ட்ரோன்கள் ஜெட்-எஞ்சின் மூலம் இயங்குபவை என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.
இந்த ஜெட்-ட்ரோன்களைத் தடுக்க உக்ரைன் போர் விமானங்கள் தற்போது முயன்று வருகின்றன, அதே நேரத்தில் மிகவும் திறமையான தொழில்நுட்பத்தை உருவாக்க உக்ரைன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
உணவு விநியோக மையங்கள் மற்றும் சில்லறை வர்த்தக மையங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் உக்ரைனின் விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளன. இதனால் சில சூப்பர் மார்க்கெட் அலமாரிகள் காலியாகி, உணவுப் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த அச்சங்களைத் தணிக்கும் வகையில், ஜெலென்ஸ்கியின் ஆலோசகரான செர்ஹி பெஸ்க்ரெஸ்ட்னோவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: உக்ரைன் மக்கள் பட்டினியால் வாட மாட்டார்கள். வதந்திகளுக்கோ, தவறான தகவல்களுக்கோ அல்லது பீதிக்கோ பொதுமக்கள் இடம் கொடுக்க வேண்டாம். உற்பத்தியாளர்களும் சில்லறை விற்பனையாளர்களும் விநியோகச் சங்கிலியை சீரமைத்து வருவகிறார்கள். தேவைப்பட்டால் உணவுப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய ஐரோப்பிய நாடுகள் தயாராக இருக்கும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், எதிர்வரும் குளிர்காலத்தில் பொதுமக்களுக்குக் கடும் குளிரையும் குடிநீர் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தும் நோக்கில், உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் வடக்கு பிராந்தியமான செர்னிஹிவ் மீது ரஷ்யப் படைகள் இரவில் பிரம்மாண்ட ட்ரோன் தாக்குதலை நடத்தியதில், அங்கிருந்த மின் வசதி மையம் சேதமடைந்ததாக அப்பிராந்திய ராணுவ நிர்வாகத் தலைவர் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்தார்.
உக்ரைனின் மின் உள்கட்டமைப்புகள் மீது பிரம்மாண்ட தாக்குதல்களை நடத்தத் தயார் செய்து வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 14 ரஷ்ய பிராந்தியங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா மற்றும் கருங்கடல் வான்பரப்பில் உக்ரைனின் 239 ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.




