Close
ஆகஸ்ட் 31, 2026 10:49 மணி

நேபாள வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கைகள் மட்டும் போதுமானதாக இல்லை: நிபுணர் விளக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் கிராமங்களைக் காப்பாற்ற அவசரக்கால எச்சரிக்கைகள் போதுமானதாக இருக்கவில்லை என்று ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நிபுணர் பிரசிதா கதிவாடா தெரிவித்துள்ளார்

திடீர் வெள்ளப்பெருக்கு என்பது சில நிமிடங்களிலேயே ஒரு ஆற்றின் போக்கையே முற்றிலுமாக மாற்றிவிடும் ஆற்றல் கொண்டது. நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த புதன்கிழமை அன்று நேரில் கண்ட துயரம் இதுதான்.

போடேகோஷி–திரிசூலி ஆற்றுப் படுகையில் திடீரெனப் பெருக்கெடுத்த பிரம்மாண்ட வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுடன் கிராமங்களை அடித்துச் சென்றது. இப்பேரிடரில் 469க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. இதில் 39 ஆஸ்திரேலியர்களும் அடங்குவர்.

இமயமலையின் உச்சிப் பகுதியில் பாறைகளும் பனிக்கட்டிகளும் பெருமளவில் சரிந்து விழுந்ததே இந்த திடீர் வெள்ளத்திற்கு முதன்மைக் காரணம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய பேரிடர்களின் போது, உயரமான பாதுகாப்பான இடங்களை அடையக் கிடைக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் விலையுயர்ந்த நேரமாகும். எனவே, வேகமாக உருவெடுக்கும் இதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள சமூகங்கள் தயாராக இருப்பதை நாம் எவ்வாறு உறுதி செய்ய முடியும்?

இயற்கைப் பேரிடர்கள் தாக்குவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிய பல்வேறு கருவிகள், தரவுகள் மற்றும் தகவல் தொடர்புச் சேனல்களை முன்னெச்சரிக்கை அமைப்புகள் பயன்படுத்துகின்றன.

ஒரு வெள்ளமோ அல்லது காட்டுத்தீயோ தொடங்கிய பிறகு எஸ்எம்எஸ் அனுப்புவதுடன் இந்த அமைப்புகளின் பணி முடிந்துவிடுவதில்லை. சாத்தியமான ஆபத்தை முன்கூட்டியே கண்டறிதல், அது தீவிரமடைவதைக் கண்காணித்தல் மற்றும் அது எங்கு நோக்கிச் செல்லும் என்பதைக் கணித்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மிகவும் திறம்படச் செயல்படும் முன்னெச்சரிக்கை அமைப்புகள், தகவல்களை விரைவாக மக்களுக்கும் பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் கொண்டு சேர்த்து, அவர்களை உடனடியாகச் செயல்பட வைக்கின்றன.

இத்தகைய அமைப்புகள் ஏற்கனவே பல உயிர்களைக் காத்துள்ளன. 2025ம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தின் பிளாட்டன் கிராமத்தை மிகப்பெரிய பாறை-பனிச்சரிவு அப்பகுதியைத் தாக்குவதற்கு முன்பே, தொடர் கண்காணிப்பு மூலம் அதிகாரிகளால் பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்தது.

ஐஸ்லாந்தில் 2010ம் ஆண்டு எய்யாஃப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடிப்பின் போது ஏற்பட்ட திடீர் பனிப்பாறை வெள்ளத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட மக்கள் திட்டமிடப்பட்ட அவசரகால நடைமுறைகள் மூலம் தப்பினர்.

ஒரு பேரிடர் எங்கு நகர்கிறது, எவ்வாறு தீவிரமடைகிறது என்பதைக் கண்காணிப்பது மிக முக்கியம். வெள்ளத்தைப் பொறுத்தவரை, ஆற்றின் முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ள கண்காணிப்பு நிலையங்கள் நீர் மட்டத்தையும் அதன் பாய்ம அளவையும் கணக்கிடுகின்றன. கேமராக்களும் சென்சார்களும் வெள்ளத்தின் வேகம் மற்றும் கழிவுகளைக் கண்காணிக்கின்றன.

நிகழ்நேர வெள்ள மாதிரிகளுடன் இவை இணையம்போது, வெள்ளம் எப்போது கீழ்நிலைப் பகுதிகளை அடையும், அதன் பாதிப்பு எவ்வளவு கடுமையாக இருக்கும் மற்றும் எந்தப் பகுதிகள் நீரில் மூழ்கும் என்பதைக் துல்லியமாகக் கணித்துவிடும்.

இந்தத் தகவல்கள் அவசரகால மீட்புக் குழுவினருக்குப் பெரிதும் உதவுகின்றன. ஒரு கிராமத்திற்கு வெள்ளம் வர 20 நிமிடங்களும், மற்றொரு கிராமத்திற்கு 50 நிமிடங்களும் உள்ளன என்பதை அதிகாரிகள் அறிந்தால், மீட்புப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் திட்டமிடவும், ஆபத்தான பாதைகள் மற்றும் பாலங்களை அடையாளம் காணவும் முடியும்.

நேபாளத்தில் அவசர எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டபோதிலும், உள்ளூர் கிராமங்களைக் காப்பாற்ற அவை போதுமானதாக இல்லை.

நேபாளத்தின் லங்டாங் தேசியப் பூங்காவில் காலை 8:40 மணியளவில் பிரம்மாண்டமான பனிப்பாறை சரிந்ததால் இந்தத் தொடர் பேரிடர் தொடங்கியது. திபெத்திலிருந்து போடேகோஷி ஆற்றுப் படுகைக்குள் பெரும் வெள்ளம் புகுந்துள்ளதாக நேபாளத்தின் வெள்ளக் கணிப்புப் பிரிவுக்கு உடனே தகவல் கிடைத்தது.

சில நிமிடங்களிலேயே 6,00,000க்கும் மேற்பட்ட மொபைல் எச்சரிக்கை குறுஞ்செய்திகள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் அதற்குள்ளாகவே, வடக்கு நேபாளத்தில் உள்ள ‘சியாப்ருபேசி’ கண்காணிப்பு நிலையம் தனது தொடர்பை இழந்து செயலிழந்திருந்தது. வெள்ளம் கீழ்நோக்கி நகர்ந்தபோதும், அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு எச்சரிக்கைகளை வெளியிட்ட வண்ணமே இருந்தனர்.

இத்தகைய பேரிடர் அபாயம் குறித்து நேபாள அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாகவே தெரியும். 2020 ஆம் ஆண்டில், ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் நடத்திய மதிப்பீட்டில், அப்பகுதியின் முக்கிய ஆற்றுப் படுகைகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 47 பனிப்பாறை ஏரிகள் கண்டறியப்பட்டன.

செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ரிமோட் சென்சிங் மூலம் இவை கண்டறியப்பட்டன. இத்தகைய உயர் ஆபத்து உள்ள பகுதிகளை கேமராக்கள், நீர்மட்டமானிகள், வானிலை நிலையங்கள் மற்றும் நில அதிர்வுச் சென்சார்கள் மூலம் கண்காணிக்க முடியும்.

நேபாள அரசு, இமயமலையில் வேகமாக வளர்ந்து வரும் ‘இம்ஜா’ பனிப்பாறை ஏரியில் இதுபோன்ற தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தியது. 2016 இல் சென்சார்களும் தானியங்கி சைரன்களும் பொருத்தப்பட்ட போதிலும், போதிய பராமரிப்பின்றி அவை பழுதுடைந்துவிட்டன.

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு, முன்னெச்சரிக்கை அமைப்புகளின் வரம்புகளையும் பலவீனங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. பேரிடர் தொடங்கும் இடத்திற்கு அருகில் வாழும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் மிகவும் தாமதமாகவே கிடைத்தன. இதனால்தான் எச்சரிக்கை அமைப்புகளை முடிந்தவரை தானியங்கிமயமாக்க வேண்டும்.

ஆபத்தான சூழலைச் சென்சார்கள் கண்டறிந்தவுடன், அந்தத் தகவல் தாமதமின்றி கணிப்பு மற்றும் அவசரகால அதிகாரிகளுக்குச் சென்றடைய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இருப்பிடம் சார்ந்த மொபைல் எச்சரிக்கைகள் உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.

ஆனால், பேரிடர் நேரங்களில் மொபைல் நெட்வொர்க்குகளும் மின்சாரமும் செயலிழக்கக்கூடும். எனவே கைபேசிகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது. சைரன்கள், ரேடியோ மற்றும் பயிற்சி பெற்ற உள்ளூர் பணிக்குழுக்கள் மாற்று ஏற்பாடாகச் செயல்பட்டு, மக்கள் எங்கு செல்ல வேண்டும், எந்த வெளியேற்றப் பாதைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வழிகாட்ட வேண்டும்.

கண்காணிப்பு நெட்வொர்க்குகள் கடுமையான சூழலையும் தாங்கி நிற்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். நேபாளத்தில் சமீபத்திய வெள்ளத்தின் போது பல வானிலை நிலையங்கள் சிக்னல் அனுப்புவதை நிறுத்தின அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சில கருவிகள் பழுதடைந்தாலும் கண்காணிப்பு உள்கட்டமைப்பு தொடர்ந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

முன்னெச்சரிக்கை அமைப்புகளால் இயற்கைப் பேரிடர்களைத் தடுக்கவோ அல்லது ஆபத்தில் உள்ள மக்களை முழுமையாகப் பாதுகாத்துவிடவோ முடியாது. பேரிடர் அபாய வரைபடமாக்கலுடன் இணைத்தே இவற்றைச் செயல்படுத்த வேண்டும். இது குறிப்பிட்ட பேரிடரால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. பின்னடைவுகளைத் தாங்கும் உள்கட்டமைப்பு மற்றும் தெளிவான வெளியேற்றப் பாதைகள் பேரிடர்களை எதிர்கொள்ள மிகவும் அவசியமானவை.

எந்த வகையான தலையீடுகள் மிகவும் பயனுள்ளவை மற்றும் எந்தப் பிராந்தியங்களுக்கு அவை தேவை என்பதை மையமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்திய நேபாள வெள்ளத்தைத் தொடர்ந்து, ஆற்று கண்காணிப்பு நிலையங்கள் எவ்வளவு இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும், பாதுகாப்பாக வெளியேற பல்வேறு கிராமங்களுக்கு எவ்வளவு முன்னெச்சரிக்கை நேரம் தேவை போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடைகள் காணப்பட வேண்டியுள்ளன.

ஒரு பேரிடர் தாக்குவதற்கு முன்பாக மக்களுக்குச் சில நிமிடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும். அந்த ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக மாற்றுவதே ஒரு திறம்படச் செயல்படும் முன்னெச்சரிக்கை அமைப்பின் உண்மையான நோக்கமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top