நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில், புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர் முதல் பரிசு பெற்றார்.
நாமக்கல் கம்பன் கழகத்தின் சார்பில், மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. அதன் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் அரசு பரமேஸ்வரன், அமைப்பாளர் தில்லை சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கை வண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன், சொல் வண்ணம் எங்கு கண்டேன் ஆகிய தலைப்புகளில் நடந்த பேச்சுப்போட்டியில், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, மதுரை, காரைக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 45 கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளியப்படுத்தினர்.
அதில், புதுக்கோட்டை ஜெ.ஜெ., பி.எட் கல்லூரி மாணவர் மணிவாசகம் முதல் பரிசும், திருப்பத்தூர் திருமால் பி.எட் கல்லூரி மாணவர் மகேஸ் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலை மாணவர் நவீன் ஆகியோர் 2ஆம் பரிசும், மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர் சுப்ரமணியன் 3ஆம் பரிசும் பெற்றனர். அவர்களுக்கு முறையே ரூ. 10,000 5,000, 3,000 என பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த தமிழ்த்துறை பேராசிரியர்கள் கலையரசி, சத்தியபிரியா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். கம்பன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




