நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு அளிக்கப்படும் இலவச நுண்கலை பயிற்சிகளை மாநில இயக்குநர் நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில், ஜவகர் சிறுவர் மன்றம் மூலம், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், நாமக்கல் மாநகராட்சி கோட்டை உயர்நிலைப் பள்ளியில் வாரம் தோறும் சனி மாலை மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் நுண்கலை பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.
ஜவகர் சிறுவர் மன்ற செயல்பாடுகளை கலை பண்பாட்டு துறை இயக்குநர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாணவ மாணவிகள் யோகா, சிலம்பம் ஆடி திறமையை வெளிப்படுத்தினர்.
மாநில, தேசிய அளவில் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கலந்து கொண்டு பரிசு பெற்ற குழந்தைகளுக்கு இயக்குநர் பாராட்டு தெரிவித்தார். விடுமுறை நாட்களில் குழந்தைகளை அழைத்து வந்து ஜவகர் சிறுவர் மன்றத்தில் சேர்த்து ஆக்கபூர்வமான கலைகளை கற்றுக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி தரவேண்டும் என அவர் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
சேலம் மண்டல உதவி இயக்குநர் சங்கரராமன், சேலம் அரசு இசை பயிற்சி பள்ளி தலைமையாசிரியை கங்கா. நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார். நாமக்கல், கொல்லிமலை கலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




