நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மரங்கள், தண்ணீர் உள்பட இயற்கை வளங்களின் அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
முன்னதாக சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு நமது வாழ்க்கையில் காடுகளின் முக்கியத்துவம் மற்றும் உலக தண்ணீர் நாளை முன்னிட்டு நமது வாழ்க்கையில் தண்ணீரின் முக்கியத்துவம் என்ற தலைப்புகளில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், உலக மரநடுதல் நாளை முன்னிட்டு பசுமையான எதிர்காலத்திற்காக ஒரு மரம் நடுங்கள் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் கல்லூரி வளாகத்திலும் அல்லது தங்களது சொந்த ஊர்களிலும் மரங்களை நட்டு ஜிபிஎஸ் கேமராவில் புகைப்படங்களை பதிவு செய்து சமர்ப்பித்தனர்.
இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விலங்கியல் துறைத் தலைவர் ராஜசேகரபாண்டியன், கல்லூரி காலநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி, துணை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




