Close
செப்டம்பர் 3, 2026 7:53 மணி

சுங்கக்கட்டண உயர்வைத் திரும்ப பெற கொமதேக கோரிக்கை

நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என கொமதேக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் அதிக அளவில் உள்ளது. அதுவும் குறிப்பாக நாமக்கல்லில் லாரிகள், ட்ரெய்லர்கள், கேஸ் டேங்கர்கள், கன்டெயினர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான லாரிகள் அதிக அளவில் உள்ளன.

பல்வேறு பிரச்சினைகளால் தற்போது, லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது லாரி தொழிலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

60 கிலோ மீட்டருக்கு குறைவான இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகளைகளையும், நகர்புறச் சுங்கச்சாவடிகளைகளையும், காலாவதியான சுங்கச்சாவடிகளையும் அகற்ற பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் பலன் இல்லை. இதே நிலை நீடித்தால் சுங்கச்சாவடியால் லாரி தொழில் முற்றிலுமாக முடக்கப்படும்.

இந்த நிலையில், சுங்க கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெறுவதுடன் காலாவதியான சுங்கச்சாவடிகள், 60 கிலோமீட்டர் குறைவான சுங்கச்சாவடிகள், நகர்ப்புற சுங்கச்சாவடிகளையும் அகற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். இதனை தமிழக அரசும் கவனத்தில் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top