Close
மே 3, 2024 9:18 மணி

வடகிழக்கு பருவமழை  காலங்களில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்

புதுக்கோட்டை

தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க யோசனை

வடகிழக்கு பருவமழை  காலங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதை சமாளிப்பதற்கான முனேற்பாடு பணிகளை மேற்கொண்டுபயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக் கலைப்பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதற்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை செய்து, பயிர்களை பாதுகாத் துக்கொள்ளலாம்.

பசுமைக்குடில்கள் மற்றும் நிழல்வலைக்குடிகளில் பயிர் செய்யும் விவசாயிகள் பருவமழை காலத்தில் அதன் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைத்து கட்டுவதன் மூலம் சேதத்தை தடுக்கலாம். மேலும் பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று புகாமல் பாதுகாக்கவும், கிழிந்து போன நிழல்வலைகளை தைத்து சரி செய்யவும் அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்யவும்.

மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும்.

தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்ப்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.

காற்றினால் பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட வேண்டும். மிளகு செடியில் நோய் வராமல் தடுக்க டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வேர்ப்பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்க வேண்டும்.

வாழையில் சேதத்தை தடுக்க, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தபடுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.

வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.

இவ்வாறு வடகிழக்கு பருவ மழையினால் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கா வண்ணம் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top