Close
மார்ச் 29, 2024 1:00 காலை

புதுக்கோட்டை அருகே சர்வதேச தாவர ஆரோக்கிய தினம்

புதுக்கோட்டை

அரிமளத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் மேகலாமுத்து தலைமையில் நடைபெற்ற சர்வதேச தாவர ஆரோக்கிய தின விழாவில் பேசுகிறார்,எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர் ராஜ்குமார்

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைந்து நடத்திய சர்வதேச தாவர ஆரோக்கிய தின விழா நடைபெற்றது.

அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிமளம் ஒன்றியக் குழுத்தலைவர் எம்.மேகலா முத்து தலைமை வகித்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர் ராஜ்குமார் பங்கேற்று ஆரோக்கிய தினம் குறித்து  பேசியதாவது:

ஐக்கிய நாடுகள் சபை 2020 -ஆம் ஆண்டை சர்வதேச பயிர் ஆரோக்கிய ஆண்டாக அறிவித்தது. 2020-ல் இருந்து மே 12-ஆம் நாள் சர்வதேச பயிர் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப் படுகிறது. பயிர் ஆரோக்கியத்தை பேணுவது பற்றி சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் சர்வதேச பயிர் பாதுகாப்பு தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

பயிர்களில் ஆரோக்கியத்தை முறையாக பாதுகாப்பது பசியான்மையை போக்கவும், வறுமையை குறைக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும். இந்த ஆண்டின் சர்வதேச பயிர் பாதுகாப்பு தினத்தின் கருபொருள் பயிர் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

புதுக்கோட்டை
விழாவில் பேசிய அரிமளம் ஒன்றியக்குழு தலைவர் மேகலா முத்து

பயிர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றது. பருவகால மாற்றத்தின் தாக்கம் இதை மேலும் தீவிரப் படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இயங்கும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சுமார் 40% விளைச்சல் இழப்பு பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படுகின்றது என்று கண்டுபிடித்துள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு உதவுவது மிகவும் அவசர அவசியமாகும்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத “வளம் குன்றா வேளாண்மை” முறையை கடைபிடிப்பது ஒன்றுதான் பயிர் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான முக்கிய வழியாகும். விவசாயிகளுக்கு வளம் குன்றா வேளாண்மை முறையை கடைபிடிக்க போதிய விழிப்புணர்வும், விளைச்சல் மற்றும் வருமானத்தை பெருக்க போதிய வழிகாட்டுதலும் வழக்குவது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

எனவே அனைத்து தரப்பிரர்களும் விவசாயிகளுக்கு போதுமான ஒத்துழைப்பை அளித்து பயிர்பாதுகாப்பு உறுதி செய்ய உதவ வேண்டும் என்றார் ராஜ்குமார்.

புதுக்கோட்டை
விழாவில் பேசிய அரிமளம் வேளாண்மை உதவி இயக்குநர் கே.பாண்டி

நிகழ்ச்சியில் அரிமளம் வேளாண்மை உதவி இயக்குநர் கே.பாண்டி,  பயிர் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேளாண் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல் பாடுகளை  விளக்கிப் பேசினார்.

நிகழ்வில், அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.பஞ்சநாதன், எ.சரவணராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  நிகழ்வில் விவசாயிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், சுயஉதவிக்குழு பெண்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் பங்கேற்றார்கள்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா அனைவரையும் வரவேற்றார். தொழில்நுட்ப அலுவலர் ஆர்.வினோத்கண்ணா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top